செவ்வாய், ஏப்ரல் 21, 2009

எது இன்பம்?

0 கருத்துகள்













இலக்கிய இன்பம்

இன்பத்துள் இன்ப மெது இன்பம் -இவ்
வையத்து பிறப்ப தென்பது பேரின்பம்
குழந்தை பருவ மதுவே ஆனந்தம்
குமரனா னதும் கன்னியி னின்பம்
கடவுளை காண்ப தென்பது பக்தின்பம்
கண்டதும் கேட்பது வரமென் னுமின்பம்
நித்திரையி லிருப்பதே ஒருவகை இன்பம்
நிலாமுகத் தாளருகினில் சுகம் இன்பம்
பச்சை புற்களில் படுப்பது தனியின்பம்
பருவத்தால் நாணுவது வெட்க மின்பம்
கல்லூரி படிப்பி னிடையில் காதலின்பம்
கற்பனைக் கெட்டிய வரையவளே இன்பம்
முத்தத்தால் பசித்தோம் சுவை யின்பம்
முடிவினிலே கிடைத்த தென்னவோ தனியின்பம்
இங்ஙனம் இன்பத்துள் இன்பம் வந்தாலும்
இலக்கியமே இன்பம்

ஞாயிறு, ஏப்ரல் 19, 2009

எதிரிகள் ஜாக்கிரதை

4 கருத்துகள்













காலில் விழுந்தது ஏன்?

திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை கலைஞர் தொலைக்காட்சியில் கண்டேன்.

கூட்டத்தில் பார்வர்டு பிளாக் சந்தானம், திருப்பூர் அல்தாப், பசீர் அகமது, எஸ்ரா சற்குணம், பு.தா. இளங்கோவன்,  பொன். குமார், ஆகியோர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசினார்கள். அனைவரும் அருமையாக பேசினார்கள். பொன். குமாரும், பசீர் அகமதும் இத்தனை ஆண்டுகள் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தவர்கள். நேற்றுதான் திமுகவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பொன். குமார் பேசும்போது தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு வந்ததற்கு காரணமே கடந்த முறை ஆண்ட அதிமுகதான். காரணத்தையும் அவரே சொன்னார். ‘அதிமுக ஆட்சியில் மின்சார உற்பத்தி திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வந்ததில்லை என்றும். அதுமட்டுமல்லாமல் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் இணைப்புதான் கொடுத்தென்றும், தற்போதைய திமுக ஆட்சி வந்த பிறகு ஒரு ஆண்டு 5 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஆக மூன்றாண்டுகளில் 15 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தபடி நிறைய தொழிற்சாலைகள் உருவாகின. இதனால் தான் மின்சார தட்டுபாடு ஏற்பட்டது. இனி கவலை வேண்டாம் வடசென்னை, உடன்குடி, தூத்துகுடி போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டன மின்சார தட்டுபாடு வராது. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு வந்த இந்திய பிரஸ் குழுவின் தலைவர் ரே ‘தமிழ்நாடு போல எல்லா மாநிலங்களும் கருத்துரிமை சுதந்திரம் கொடுத்தால் இந்தியா மேலும் முன்னேறலாம்’ என்று கூறினார் என்று பேசினார்.

சுப. வீரபாண்டியன் பேசும்போது இலங்கைத் தமிழருக்காக உண்மையான உணர்வுடன் இருப்பவர் கலைஞர். அவரால் மட்டும்தான் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

ஆர்.எம். வீரப்பன் பேசும்போது, அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அண்ணாவின் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.

கி. வீரமணி அதிமுகவின் சென்ற முறை தேர்தல் அறிக்கையையும் இந்த தேர்தல் அறிக்கையையும் கையில் வைத்துக்கொண்டு பேசினார். ஜெயலலிதா ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒன்றைச் சொன்னார். இப்போது ஒன்றை சொல்வார். நாளை ஒன்றை கூறுவார். திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தான் இப்போது இந்தியா பின்பற்றுகிறது என்று கூறினார்.

கூட்டத்தில் ‘வெற்றி நமதே’ என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டது. அதிலுள்ள எட்டு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

ஒன்று ‘அழகிய திருமகன்’ படத்தில் வரும் ‘உன்னால் முடியும் உன்னால் முடியும் வாடா’ பாடலின் மெட்டில் அமைந்திருந்தது. மற்றொன்று ‘நாக்கு முக்கா’ பாடல் மெட்டில் அமைந்திருந்தது. இரண்டாவது பாடலுக்கு தொண்டர்களிடையே பலத்த வரவேற்பு. நிறைய தொண்டர்கள் எழுந்து ஆட ஆரம்பித்தனர். வயதான கிழவர் ஒருவரும், பெண்மணியும் கூட எழுந்து ஆட ஆரம்பித்தார்கள். நாக்கு முக்கா மெட்டுப் பாடலைக் கேட்டு மேடையில் மு.க. அழகிரி அருகில் அமர்ந்திருந்த தயாநிதி மாறன் சிரித்துக்கொண்டே ரசித்தார்.

பின்னர் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் பேசும்போது, இன்றைக்கு தலைவர் கலைஞரின் தேர்தல் அறிக்கையைத்தான் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் காப்பியடிக்கின்றது. ஆந்திராவில் புதிய கட்சித் தொடங்கிய சீரஞ்சிவிகூட தலைவர் கலைஞரின் அறிக்கையைத்தான் பின்பற்றுகிறார். ஒரு ரூபாய் இந்தியா முழுதும் பேசுவதற்கு வழிவகுத்தது மன்மோகன் சிங் அரசு. எல்லோருடைய கையிலும் வாட்ச் இருக்கிறதோ இல்லையோ? கண்டிப்பாக செல் இருக்கும். எனவே உதயசூரியன், கை சின்னத்திற்கு ஒட்டு போடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும் சிதம்பரம்தொகுதியின் வேட்பாளருமான தொல். திருமாவளவன் பேச வந்தார். ‘அதிமுக தலைவர் ஜெயலலிதா கூட்டணி தலைவர்கள் வந்தால் அவர்களுக்கு மனிதாபிமான முறையில் கூட மதிப்பதில்லை. திருமாவளவன் தவறான கூட்டணியில் சேர்ந்துவிட்டார் என்று சொல்லும் பாமக நிறுவனர் அய்யா அவர்கள், செல்வி ஜெயலலிதாவை பார்க்க சென்றார். ஜெயலலிதா வெளியில் நின்று வணக்கம் சொல்வார். இவரும் பதிலுக்கு வணக்கம் சொல்வார். இருவருக்குமிடையே இடைவெளி அதிகம் இருக்கும். பக்கத்தில் நிற்க முடியாது. நின்றால் அவ்வளவுதான். ஆனால் தலைவர் கலைஞர் அப்படியில்லை. எழுந்து வந்து வரவேற்று, நலம் விசாரித்து, தேநீர் கொடுத்து உபசரிப்பார். இதோ கலைஞருக்கு அருகில் எப்போதும் அமர்ந்திருக்கும் அன்பழகனார் போல் கூட்டணித் தலைவர்கள் அமரலாம். ஆனால் அங்கு? தொகுதியில் பங்கீட்டில் 21 வயதான இளைஞன் 2 குழந்தைகள் பெற்று 16 செல்வங்களோடு சிறப்பாக வாழ்வதுபோல தொகுதியைப் பங்கீட்டுள்ளார். 21 வயது இளைஞன் திமுக, 2 குழந்தைகள் விடுதலை சிறுத்தைகள், 16 செல்வங்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள், முஸ்லிம் லீக் 1 ஒரு தொகுதி கொடுத்ததற்கு விளக்கம் தந்தார். ஈழத் தமிழரின் பிரச்னைகள் இந்தக் கூட்டணியில் தான் ஒருமித்த கருத்து இருக்கிறது. திமுகவும் சரி, விடுதலை சிறுத்தைகளும் சரி, காங்கிரஸும் சரி ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும் என விரும்புகின்றனர். அந்தக் கூட்டணியில் ஆளுக்கொரு கருத்தைக் கொண்டுள்ளனர். நாங்கள் ஒன்றும் புதிதாக ஈழத்தைப் பற்றி பேசவில்லை. என்று பேசினார்.

காங்கிரஸ் தலைவர் தங்கபாலுபேசியபோது, கலைஞரை நம்பியவர்களை கைவிட மாட்டார். அதுபோலத்தான் அன்னை சோனியாவும் நம்பியவர்களை கைவிட மாட்டார். பாமக தலைவர் ராமதாஸ் காங்கிரஸும் அவரோடு வந்துவிடும் என எண்ணினார். ஆனால் கலைஞர் அவர்களே நாங்கள் 35 பேரும் உங்களை கைவிட மாட்டாம். அன்னை சோனியா கைவிடமாட்டார். அதனால்தான் எங்கள் சின்னம் ‘கை‘யாக உள்ளது என்று பேசினார்.

மதசார்பற்ற ஆட்சி, தீவிரவாதத்திலிருந்து பாதுகாக்கும் ஆட்சி, ஏழைகளுக்கு உதவும் ஆட்சி எது என்று யோசித்துப்பாருங்கள். குறிப்பாக மசூதியை இடிக்க நினைப்பவர்களுக்கு, இடித்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்ட நினைப்பவர்களுக்கு உங்கள் ஒட்டு போக வேண்டுமா? நல்லாட்சி தொடர்ந்திட உதயசூரியன், கை சின்னத்தில் ஒட்டளியுங்கள் என்று திமுக பொதுச் செயலாளரும் தமிழக நிதி அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் பேசினார்.

இறுதியாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் பேசினார். கூட்டணி கட்சிகளை மதிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு அறிவுறுத்தினார். அது பெரியக் கட்சியாக இருந்தாலும், சரி சிறிய கட்சியாக இருந்தாலும் சரி அவர்களை நாம் மதிக்கவேண்டும் என்றவர் 2006ம் தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்தினால் தமிழ்நாட்டு நன்மை என்று சொன்ன அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்கள் 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். பெரியார் கண்ட கனவை, பேரறிஞர் அண்ணா கண்ட கனவை, பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவை முடக்கி போட வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? எந்த தைரியத்தில் வந்தது. இலக்கியத்தில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது இருக்கிறது. நமக்கு இனியவை நாற்பதுதான் என்று பேசினார்.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியபோது முதன்முதலில் திருவள்ளுர் பெண் வேட்பாளரை மு.க. ஸ்டாலின் அழைக்க அதன்பின் ஒவ்வொருவராக அழைத்தவர். வேட்பாளர்களில் கூட்டத்தினரை அதிகம் கவர்ந்தவர்கள் என்று பார்த்தால் தயாநிதி மாறன், மு.க. அழகிரி, நெப்போலியன், ரித்தீஷ் ஆகியோருக்கு கைதட்டல், விசில்கள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர்களில் ப. சிதம்பரத்தை தவிர அனைவரும் வந்திருந்தார்கள்.

ஆனால் திமுக கூட்டத்தில் இதுவரை நடைபெறாத ஒன்று மேடையில் நடைபெற்றது. வேட்பாளர்கள் அனைவரும் கலைஞரின் காலைத் தொட்டு வணங்கினார்கள். இது மனதுக்கு வேதனையளிக்கக் கூடிய செயலாக எனக்கு பட்டது.