செவ்வாய், மே 12, 2009

அன்னையும் அம்மாவும்

0 கருத்துகள்














அதிக பங்கு யாருக்கு?

உலகிலுள்ள சில தமிழ் அமைப்புகளால் இன்று ‘ஈழத்தாய்’ என்றழைக்கப்படும் செல்வி ஜெயலலிதா. இதுவரை ஈழத்திற்காகவும், ஈழத்தில் வாழும் மக்களுக்காகவும், ஈழத்திற்காக போராடும் புலிகளுக்காகவும் என்ன செய்துள்ளார்? என்பதை முதலில் விளக்க வேண்டும். இல்லை யோசித்து பார்க்க வேண்டும்.

இன்று நான் தனி ஈழம் வாங்கித் தருவேன் என்று முழங்கியதால் மட்டுமே அவர் ஈழத்தாய் என்றழைக்கப்பட்டது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது.

ஈழப் பிரச்னையில் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று முதலில் கூறியதே செல்வி ஜெயலலிதாதான். அதன்பின்தான் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தது.

விடுதலைப் புலிகள் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியவர் ஜெயலலிதா.

தமிழகத்தில் சுப்பிரமணிய சுவாமி, சோ, ஜெயலலிதா இந்த மூவரும் எப்போதும், எந்நேரமும், அவ்வளவு ஏன் தூங்கிக் கொண்டிருக்கும்போது இவர்களை எழுப்பிக் கேட்டாலும் ‘என்னைக் கொல்ல விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருக்கின்றனர்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதில் செல்வி மட்டும் தற்போது ஈழத்தை அமைத்தே தீருவேன் என்றும், அதற்காக எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறுவது வேடிக்கை. ஏமாற்று வேலை. மோசடி வேலை.

அப்படியே அம்மையார் 40 தொகுதியிலும் ஜெயித்தால்கூட எப்படி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவார்? ஏதோ பன்னீர்செல்வத்தையும் ஜெயகுமாரையும் அனுப்புவதுபோல சொல்லிக்கொள்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அதிமுக கட்சி மந்திரிசபையில் இடம்பிடித்தது. அப்போதும் தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சிதான். அதனை கலைக்க வேண்டுமென்று பிரதமர் வாஜ்பாயை மிரட்டினார். ஆனால் வாஜ்பாயை மசியவில்லை. உடனே ஆதரவை வாபஸ் பெற்றார். விளைவு 11 மாதத்திலேயே அடுத்த தேர்தலை சந்தித்தது. இப்போது வெற்றி பெற்றாலும் அதுதான் நடக்கும்?

ஈழப் பிரச்னைக்காக ஒன்றும் செய்துவிட போவதில்லை. ஈழப் பிரச்னையில் இப்போது முக்கியப் பங்கு வகிப்பவராக கூறப்படும் சோனியா காந்தி. சோனியா காந்தியாவது ராஜீவ் காந்தி கொலைக்குப் பழிவாங்குகிறார் என்று அனைவரும் கூறுவதுபோல் வைத்துக்கொண்டாலும்கூட, இத்தனை நாள்கள், இத்தனை ஆண்டுகள் ஜெயலலிதா எதற்காக விடுதலைப் புலிகளையும், ஈழப் பிரச்னையையும் கண்டுகொள்ளாமல் பழிவாங்கினார் என்பதை அனைவரும் உணர தவறிவிட்டனர்.

ஈழப் பிரச்னையில் சோனியா காந்தியின் பங்கு இருக்கிறது என்று நம்பும் மக்களே, சோனியாவின் பங்கைவிட ஜெயலலிதாவின் பங்கு அதைவிட கூடுதலாகவே இருந்திருக்கிறது. இருக்கிறது. இருக்கப்போகிறது என்பதையும் நம்புங்கள்.

இதுவரை ஈழப் பிரச்னையில் துரோகம் இழைத்தவர் என்று பார்க்கும்போது அதிக பங்கு வகித்தவர் என்றால் சோனியாவைவிட ஜெயலலிதாதான் முன்னிலையில் இருப்பார்.

திங்கள், மே 11, 2009

தமிழர்களே இவர்களை மன்னியுங்கள்!

3 கருத்துகள்












புதிய அதிமுக கொ.ப.செ.கள்


சீமான் ராமேஸ்வரத்தில் இலங்கைப் பிரச்னையில் பேசியதிலிருந்து அவருடைய பேச்சை இணைய தளத்தில் தேடிக் கண்டுபிடித்து கேட்பேன். அவர் உணர்வுபூர்வமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசுவதைக் கண்டு என் ரத்தமும் உணர்வும் வெகுண்டெழும்.

பாரதிராஜா தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் தேர்தலில் இந்திரா காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்.

சீமான் பேச்சை நேற்று நான் ஜெயா டிவியில் கேட்டேன். சீமான் இத்தனை நாள்கள் இலங்கைப் பிரச்னைகளை பேசும்போது உணர்வும் உணர்ச்சியும் இருந்த அவரது பேச்சு. நேற்று அவர் பேச்சைக் கேட்குமபோது எனக்கு ஏற்படவில்லை. காரணம் அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே மாறியிருந்தார் என்று சொல்லலாம். பேச்சில் வரி வரிக்கு இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள். இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.

பாரதிராஜா இவர் சமீப ஆண்டுகளாக தமிழ் மேலும், தமிழினத்தின் மேலும் இவருக்கு புதுசா உணர்வு பிறந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று வாய்கிழிய என் தமிழன், என் தமிழினம் என்று பேசும் இவர் 1983 இலங்கைப் பிரச்னை நடைபெற்றபோது வாய் மூடி மவுனியாக இருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

இவர்கள் செய்வது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இத்தனை வருடங்களாக விடுதலைப் புலிகளினால் எனக்கு ஆபத்து, பிரபாகரனை இங்கு அழைத்து வந்து தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று பேசியதோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை போடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்பதை இவர்களுக்கு தெரியுமா? அல்லது தெரியாதா? சாகப் போகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்பதுபோல இத்தனை ஆண்டுகள் எதுவும் பேசாமல் இப்போது தீடீர் ஞானோதயம் வந்ததுபோல் தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்பது ஓட்டுக்காக என்பது பாரதிராஜா, சீமானுக்கு போன்ற சிறந்த இயக்குநர்களுக்கு விளங்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆன கதைதான் ஞாபகம் வருகிறது. இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தமிழர்களே இவர்களை மன்னியுங்கள்!