புதன், டிசம்பர் 31, 2008

0 கருத்துகள்
பக்கிங்ஹாம் கால்வாய் சுத்திகரிப்பு - ஒரு பார்வை

சென்ற மாதம் வரைக்கும் சென்னையில் அடித்துக் கொளுத்திய வெயிலுக்கு சலித்துக் கொள்ளாத ஆட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு  சென்னைவாசிகளை சுட்டெரித்துக்கொண்டிருந்தது வெயில் என்பது நிதர்சனமான உண்மை. வியர்வை மழை, கசகசப்பு, புழுக்கம் என்று படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்கள் சென்னைவாசிகள். இப்போது வடகிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அப்புறமென்ன! இனிமேல் நாள்முழுக்க மழைக் குளியல் என்று உற்சாகப்படலாமா? ஆனால், அதுவும் முடியாது. என்ன காரணம்? 
மழை பெய்தால் சென்னை முழுக்க மழைநீர் ஆறாக ஓடும். தெரு முழுக்க மழைநீர் தேங்கி நிற்கும். மழைநீரில் கலந்துகிடக்கும் குப்பை, கூளங்களில் கால்களை வைத்து நடக்க வேண்டியிருக்கும். இது சென்னையில் இருப்பவர்களைன் தற்போதைய கவலை. 
சரி, சாலைகளில் மழைநீர் ஏன் தேங்குகிறது? அதற்கு யார் காரணம்? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதற்கு முக்கியக் காரணம் நாமாகத்தான் இருக்கிறோம். சென்னையில்  கால்வாய்களை ஒட்டி இருக்கும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் வீட்டுக் குப்பைகளையும் கழிவுகளையும் அதற்கான குப்பைத் தொட்டிகளில் போடுவதில்லை. கால்வாயில் வீசி எறிந்துவிடுகிறார்கள். அதோடு, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளின் கழிவுகளாலும் கால்வாய்கள் மாசுபடுகின்றன. எல்லாக் குப்பைகளும் கால்வாய்களில் போய் அடைக்கலமாகின்றன. அடைத்துக்கொள்கின்றன. 
கடைசியில், கால்வாய்களிலிருந்து கழிவுநீர் போக வழியில்லாமல், மண் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கால்வாய் வழியாக நீர் ஓடுவதற்கு வழியில்லாமல், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அந்தத் தேக்கம் சாலை வரைக்கும் வந்து, அதனால் சாலைகளிலும் மழைநீர் தேங்குகிறது.
ஆனால், இந்த ஆண்டு இப்படி மழைநீர் தேங்குவதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் முடிவு கட்டியிருக்கிறது நம் பொதுப் பணித்துறை. அதற்காகவே, சென்னை நகரிலுள்ள முக்கிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை படுவேகமாக முடுக்கி விட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் இருக்கும் ஒரு முக்கியமான கால்வாய் பக்கிங்ஹாம் கால்வாய்.
பக்கிங்காம் கால்வாயைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. உலகம் முழுக்க பிரபலமானது பக்கிங்ஹாம் கால்வாய். சென்னைக்குள் வருகிறவர்கள், இந்தக் கால்வாயைத் தாண்டித்தான் வரவேண்டும். 
1876ம் ஆண்டு சென்னையில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது அப்போது ஆளுநராக இருந்த பக்கிங்ஹாம்  என்பவர் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாறையும் கூவத்தையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்ஹாம் கால்வாய் என்றழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் படகில் சென்று வர்த்தகம் செய்வதற்காக பயன்பட்டிருக்கிறது இந்தக் கால்வாய். 170 கிலோ மீட்டர் நீளம் கொண்டது இந்தக் கால்வாய். 1950ஆம் ஆண்டு வரைக்கும் இதில் படகுப் போக்குவரத்து நடந்ததாகத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் கழிவுநீரைத் தேக்கி வைக்கும் சாக்கடையாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கிறது என்பது வேதனையளிக்கக் கூடிய விஷயம். முதல் வேலையாக இந்தக் கால்வாயைத்தான் சுத்தம் செய்ய இருக்கிறார்கள் பொதுப் பணித்துறையினர். அந்த வேலையைக்கூட பிரித்துவிட்டிருக்கிறார்கள். வடசென்னை பக்கிங்ஹாம், தென்சென்னை பங்கிங்ஹாம், மத்தியசென்னை பக்கிங்ஹாம் என மூன்று பிரிவுகளாக இந்தக் கால்வாயைப் பிரித்து சுத்தம் செய்ய இருக்கிறார்கள். 
எண்ணூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இருப்பதை வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் என்றும், சேப்பாக்கம் முதல் கோட்டூர்புரம் வரை இருப்பதை மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் என்றும், கோட்டூர்புரம் முதல் திருவான்மியூர், சோழிங்கநல்லூர் வரை தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர ஓட்டேரி, வேளச்சேரி, ஒக்கியம் மடுவு, போரூர், அம்பத்தூர், அயப்பாக்கம் போன்ற ஏரிகளின் உபரி நீர் செல்லும் மதகுகளையும் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக அரசு 4.05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியும் தனது பங்குக்கு ரூ. 61 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழையினால் சென்னையில் ஆங்காங்கே தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற 86 மோட்டார் பம்புக்களையும், விவசாயத் துறையிடமிருந்து பெற்ற 35 ஹெக்டேர் திறன் கொண்ட 15 பம்புகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது மாநகராட்சி.
மாநகராட்சி சார்பில் இதுவரை 51 கோடி ரூபாய் செலவில் 104 கி.மீ. நீளம் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9 கி.மீ. நீளத்துக்கு வடிகால்கள் கட்டப்பட்டு வருகின்றன.
போர்க்கால அடிப்படையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் செய்வதற்காக ஊழியர்கள், அலுவலர்கள், இளநிலைப் பொறியாளர்கள் என முக்கியப் பணியிலுள்ளோரை மழைக் காலத்தில் விடுமுறையில் செல்ல வேண்டாமென மாநகராட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், சென்னையில் எந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றாலும், அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் சென்னை மக்கள் மாநகராட்சியின் அவசர உதவி எண் ‘1913’ஐ தொடர்பு கொண்டு தெரிவித்தால் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கப்படும் என்றும், இந்தச் சேவை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

இனி, நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  சாலைகளில் மழைநீர் தேங்கிக்கிடப்பதைக் கண்டால் கண்டும் காணாமலும் போய்விடாமல் மாநகராட்சியின் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும். இப்படிச் செய்தால், மழையால் ஏற்படும் முகச் சுளிப்பிலிருந்து கொஞ்சமாவது சென்னைவாசிகள் தப்பிக்கலாம். 

(20.10.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)
0 கருத்துகள்
மல்டி லெவல் பார்க்கிங் கட்டடங்கள்!

சென்னையில் சில சமயம் சாலையில் நடக்கும்போது, மனிதர்களைவிட வாகனங்கள் அதிகமோ என்று எண்ணத் தோன்றும். எங்குப் பார்த்தாலும் வாகனங்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறிச் சென்றபடி இருக்கின்றனர். ஒரு நாள் நான் அண்ணாசாலையில் போய்க் கொண்டிருந்தபோது வாகன நெரிசல். தலையை உயர்த்திப் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள், பேருந்துகள். அதுவும் ஜெமினி மேம்பாலத்தில் இருந்து பார்த்தபோது, ஆயிரக்கணக்கான வாகனங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தன. நடந்துசெல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகத் தெரிந்தது.
இப்போது ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். 1981ம் ஆண்டில் சென்னையில் இருந்தவர்களில் 100 நபர்களில் 4 பேரிடம் வாகனம் இருந்ததாம். 1991ம் ஆண்டில் 14 பேரிடம் வாகனம் இருந்ததாம். அதுவே 2001ம் ஆண்டில் 30 பேரிடம் வாகனம் இருந்ததாம். இந்தப் புள்ளி விவரத்தைக் கொடுத்திருப்பது ஒரு தனியார் நிறுவனம். இது ஒவ்வொரு வருடமும் சென்னையில் இயங்கும் வாகனங்களைக் கணக்கெடுத்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் 2003ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
சென்னையில் மட்டும் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதாவது நாளொன்றுக்கு 500 பேர் புதிதாக வாகனங்கள் வாங்குகிறார்கள். அப்படியென்றால், ஐந்து வருடங்கள் கழிந்தபிறகு வாகனங்களின் எண்ணிக்கை எப்படி இருக்கும்? உத்தேசமாக, 100 நபர்களில் 80 பேர் வாகனங்களை வைத்திருப்பார்கள். 
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஒருபுறமிருக்கட்டும். அந்த வாகனங்களையெல்லாம் எங்கே நிறுத்தப்போகிறோம்?  நிறுத்துவதற்கான இடம் மிகவும் அவசியமல்லவா? இன்றைக்கும் சென்னையில் வாகனம் வைத்திருப்பவர்களில் நிறையபேர் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டுப் போய்விடுகின்றனர். பெரும்பாலான அலுவலகங்களின் வாசலில், அலுவலக நேரம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை வாகனங்கள் நிற்பதைப் பார்க்கலாம். அலுவலகம் மட்டும் அல்ல; பெரும்பாலான இடங்களில் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாதவர்கள் சாலையோரத்தில் நிறுத்திவிட்டுப் போய்விடுகின்றனர். இது அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வு.
தியாகராய நகரில் கடையில் துணிகளை வாங்கக் குடும்பத்துடன் வரும் ஒருவர் குடும்பத்தினரைக் கடையின் முன் இறக்கிவிடுவார். ‘வண்டியை நிறுத்திட்டு வந்துடறேன்’  என்று சொல்லிவிட்டு போவார். அவர் வாகனத்தை நிறுத்த இடம் தேடி, கண்டுபிடித்து, நிறுத்திவிட்டு வருதற்குக்குள் அவருடைய குடும்பத்தினர் துணிமணிகளை வாங்கியே முடித்திருப்பார்கள். அந்தளவிற்கு வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது, சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்காக 13,000 இடங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், தற்பொழுது 5,100 வாகனங்களை நிறுத்துமிடங்கள்தான் இருக்கின்றன. தற்போது சென்னை மாநகராட்சி இந்தக் குறைகளைக் களைய ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதற்காக, 161 இடங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறது.  
அதற்காக, ‘மல்டி லெவல் பார்க்கிங் கட்டடங்களைக் கட்டும்  திட்டம்’ என்று அந்தத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறது.  
முதலில் அப்பல்லோ மருத்துவமனைக்கு அருகிலுள்ள வாலஸ் கார்டன் பகுதியில் இந்தக் கட்டடத்தைக் கட்ட மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.  இந்த மல்டி லெவல் பார்க்கிங் கட்டடத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், 200க்கும் மேற்பட்ட கார்களும் நிறுத்துவதற்கு வசதியாக இந்தக் கட்டடம் கட்டப்பட இருக்கிறது. இந்தக் கட்டடத்தில் வாகனங்களை நிறுத்த ஒவ்வொருவருக்கும் சுமார் 3 நிமிடங்கள்தான் ஆகுமாம். கட்டடத்துக்கு உள்ளே வரும் வாகனங்களையும், வெளியில் செல்லும் வாகனங்களையும் கேமராக்கள் மூலம் பதிவு செய்து கண்காணிக்க முடியுமாம். ஒரு வாகனத்தை நிறுத்த ஒருமணி நேரத்திற்கு 10 ரூபாயும், அதற்குமேல் ஆகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும்  கூடுதலாக 10 ரூபாயும், அதிகபட்சமாக ஐந்து மணி நேரத்திற்கு 50 ரூபாயும் வசூலிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.  
மக்களுக்குப் பயன் தரும் இந்தத் திட்டத்தில் பின்னடைவு இருக்காதென்றும், மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் இத்திட்டம் செயல்பட்டுவரும்போது சென்னையில் ஏன் முடியாது என்கிற கருத்தும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. 
இப்படி அதிக வாகனங்கள் வந்து செல்லும் பிராட்வே, தியாகராய நகர் போன்ற சில இடங்களை தேர்ந்தெடுத்து மல்டி லெவல் பார்க்கிங் கட்டடங்கள் அமைப்பதற்கு மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
தியாகராய நகரில் இருக்கும் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வாகன நிறுத்துவதற்காக தங்களது சொந்த செலவில் இடங்களை வாங்கி, அதில் வாடிக்கையாளர்கள் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ள நிலையில் சென்னை மாநகராட்சியால் இது முடியாமல் போகுமா என்ன?
இன்னும் சில வருடங்களில் சென்னையில் வாகன நிறுத்துவதற்கான கட்டடங்கள் அதிகப்படுத்தப்பட்டு, சென்னை சாலையோரங்களில் வாகனங்களே நிறுத்துவது இல்லை என்று சொல்லும்படி திகழப் போவது உண்மை. இத்திட்டத்தினால் சென்னை மக்கள் பயன் பெறப்போகும் நாட்களை எண்ணிக் கொண்டேயிருப்போம்.

(24.10.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)

0 கருத்துகள்
சர்வதேசத் தரத்தில் சென்னை விமானநிலையம்

நம் இந்தியப் பொருளாதரத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அந்நியச் செலாவணி. அந்நிய முதலீடுகள், வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் ஆகியவற்றின் மூலமாக வரும் அந்நியச் செலாவணி நம் இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. இதை மனத்தில் ஓர் ஓரத்தில் ஆழமாகப் பதித்துக்கொண்டு, மேலே செல்வோம். 
இன்றைக்கு தரம் என்பது, அதிலும் உலகத்தரம் என்பது உலகில் உள்ள அனைவராலும் பேசப்படுகின்ற, பார்க்கப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றது. சாதாரண பேருந்து நிலையத்தில்கூட அடிப்படை வசதிகள் நவீனமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிற காலம் இது. 
இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தை முன் வைத்தது ‘இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணையம்.’ இதற்கு பொதுத்துறை முதலீட்டு வாரியமும் அனுமதி அளித்திருந்தது. அதன்பிறகு, பிரதமரின் தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலை அளித்து, திட்டத்தை செயல்படுத்த 1808 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியது. இன்றையச் சூழலில் சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்திற்கான தேவை இருக்கிறது என்பதுதான் உண்மை.   
இந்தியாவில் வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமான நிலையம். மீனம்பாக்கம் என்றாலே, நமக்குச் சட்டென்று விமான நிலையமும் விமானங்களும்தான் நினைவுக்கு வரும். தாம்பரம் நோக்கிச் செல்லும் சாலையில் விரையும்போது, தலைக்கு மேல் பறக்கும் விமானங்களை இன்றைக்கும் குழந்தைகளைப் போல குதூகலமாகப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். 
சில நாட்களுக்கு முன்னால்கூட ஒரு கிராமத்திலிருந்து பேருந்தில் சென்னைக்கு வந்த கிராம மக்கள், பேருந்தின் மேல் தளத்தின் மேல் நின்றுகொண்டு, விமான நிலையத்தை வேடிக்கை பார்த்ததை ஒரு நாளேடு புகைப்படமாக வெளியிட்டிருந்தது. 
தற்போது சென்னை விமான நிலையம், ‘அண்ணா பன்னாட்டு விமான நிலையம்’, ‘காமராசர் உள்நாட்டு விமான நிலையம்’ என்று இரு பகுதிகளாக இயங்கி வருகிறது. இந்த இரு விமான நிலையங்களும்தான் தற்போது புதுப்பிக்கப்பட உள்ளன. சர்வதேச தரத்திற்கு சென்னை விமான நிலையம் உயரப்போகிறது.  
தற்போது சில ஆயிரம் சதுர அடிகளில்தான் இந்த விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விரிவாக்கத்தின்படி, சுமார் 65000 சதுர அடியில் பன்னாட்டு விமான நிலையமும், சுமார் 75000 சதுர அடியில் உள்நாட்டு விமான நிலையமும் விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் தொடங்கவிருக்கிறது.
இதன்படி விமான நிலையத்தின் ‘ரன்வே’ எனப்படும் இரண்டாவது ஓடு தளம், மேலும் 832 மீட்டர் தூரத்திற்கு அதிகரிக்கப்பட இருக்கிறது. அதாவது, விமான நிலைய விரிவாக்கத்திற்குப் பிறகு, இரண்டாவது ஓடு தளத்தின் நீளம்  சுமார் 2917 மீட்டராக இருக்கும். இந்த ஓடு தளத்துக்கு இணையாக 150 கோடி ரூபாய் செலவில் ‘டாக்சி வே’ அமைக்கப்பட இருக்கிறது. இவை மட்டுமில்லாமல், கூடுதலாக பார்க்கிங் வசதிகளும், அதிக விமானங்களை நிறுத்தும் வசதிகளும் செய்யப்பட இருக்கின்றன.  
சென்னை விமான நிலையத்துக்கு தற்போது, ஒரு மணி நேரத்துக்கு 250 விமானங்களை இயக்கும் திறன் உள்ளது. அது விரிவாக்கத்துக்குப் பிறகு, 500 விமான இயக்கத் திறனாக அதிகரிக்கும். 
70களில் குறைந்த அளவே விமானங்கள் வந்து சென்ற சென்னை விமான நிலையத்தில் தற்பொழுது வருடத்திற்கு 500க்கும் மேற்பட்ட விமானங்கள் உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து செய்கின்றன என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமலுமிருக்கலாம். விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு எத்தனை விமானங்கள் வந்து செல்லும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.
வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான Sitting Room, Waiting room  அதாவது அமரும் அறை, காத்திருக்கும் அறை ஆகியவை விமானநிலையத்தின் முதல் தளத்திலும், அதே போல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான அறை கீழ்த் தளத்திலும் அமையவிருக்கிறது. புதிய விமான நிலையத்தை இயற்கை வெளிச்சத்தில் அமையுமாறு அமைக்கவிருக்கிறார்கள். இது மின்சாரச் செலவை கட்டுப்படுத்தும். 
பயணிகளை வழி  அனுப்ப மற்றும் வரவேற்க வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்கு சுமார் 47000 சதுர அடியில் ‘மல்டிலெவல் கார் பார்கிங் வசதி’ தரைத் தளத்திலும், கீழ் தளத்திலுமாக அமைக்க, பணிமேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பார்க்கிங் வசதியால் 2000க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த இடம் இருக்கும் என்கிறார்கள்.
வருடத்திற்கு சுமார் 4 மில்லியனிலிருந்து 16 மில்லியன் வரை மக்கள் வந்து செல்ல வசதியாக விமான நிலையம் அமையும். சென்னை விமான நிலையம் விரிவாக்கப்பட்டால், இயல்பாகவே சென்னைக்கு வந்து செல்லும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது உண்மை. 
‘சென்னை விமான நிலையம் விரிவாக்கம்’ என்பது ஒரு திட்டம் மட்டும் அல்ல. இதன் மூலம் எத்தனையோபேர் பயனடைவதற்கான வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. பல வெளி நாட்டுப் பயணிகள், வசதிக்குறைவு என்கிற மன வருத்தம் இல்லாமல், சர்வதேச தரத்தில் அமைந்த வெளிநாட்டு விமான நிலையத்துக்கு வந்து திருப்தியுடன் திரும்பிச் செல்வார்கள். இதன் மூலம், இயல்பாகவே வெளிநாட்டு பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  
(21.10.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)