வெள்ளி, ஏப்ரல் 03, 2009

யானை, பூனை வளர்க்கலாம் வாங்க

1 கருத்துகள்
பிராணிகளைத் தத்தெடுக்கலாம் வாங்க

எனது அலுவலகத்தின் மேலதிகாரியின் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தேன். அப்போது அவர் தான் வளர்க்கும் நாயுடன் அன்பாக பேசிக்கொண்டிருந்தார். என் மனதில் ‘என்னடா இவரு நாய்கூடவெல்லாம் பேசுறாருன்னு’ கேள்வி எழுந்தது. அதை அவரிடமே கேட்டும் விட்டேன்.

‘என்ன சார் நாயோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?’ 

‘சார், பப்பின்னு சொல்லுங்க. நாய்ன்னு சொல்லாதீங்க.  ப்ளீஸ். இந்த பப்பியும் எங்க வீட்டுல ஒரு மெம்பர்தான்’ என்றார்.

இப்படி நம்மில் சிலர் வீட்டு விலங்குகளிடம் மிகவும் அன்பாக பழகிக்கொண்டு தானிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு நாய் பிடிக்கும். ஒரு சிலருக்கு பூனை பிடிக்கும். வேறு சிலருக்கு இவைகளை விட்டு கிளி, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

நாய், பூனை வளர்ப்பவர்கள் அதனை விலங்குகளாக பார்ப்பதில்லை. தன் வீட்டுப் பிள்ளையாகத்தான் பார்க்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒரே பூனைக் கூட்டமாகதான் இருக்கும். எந்நேரமும் அந்த வீட்டிலிருந்து ‘மியாவ்’ சத்தம்தான் அதிகம் வரும். அந்த வீட்டுப் பெண்மணிக்கு பூனையென்றால் அவ்வளவு ஆசையாம்.

ஒரு சிலர் இதற்கும் மேலே போய்விடுவதும் உண்டு.  போட்டோ ஸ்டூடியோவில் ஒருவர் நாயின் சின்னப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ‘சார், இத தயவு செய்து பெரிசு பண்ணி தாங்க. எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. போட்டோவ பெரிசாக்கித்தாங்க. இத நாய்ன்னு நெனைக்காதீங்க. எம்புள்ள சார்.’ என்றபடி அழுதுவிட்டார்.

நம் நாட்டில் செல்லப் பிராணிகளாக கருதப்படுபவை நாய், பூனை, கிளி, புறா, முயல் போன்றவை. குதிரையை வியாபாரத்திற்காக  சிலர் வளர்த்து வருகிறார்கள். பசுவை நாம் தெய்வமாக எண்ணி சில வீடுகளில் வளர்த்து வருகிறார்கள். கோயில்களில் பசுக்களையும், வளர்க்கிறார்கள். சில கோயில்களில் யானைகளும் சேர்த்து வளர்ப்பார்கள்.

வெளிநாடுகளில் சிலர் காட்டு வாழும் விலங்குகளை தன் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவதையும், அவைகளுக்கு வீட்டிலேயே தனி அறையை ஒதுக்கி, சகலவசதியும் கொடுத்திருப்பதையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். இதனைப் பார்க்கும்போது நாமும் இதுபோல் காட்டு மிருகங்களை வளர்க்க முடியாதா? என்ற ஏக்கம் நமக்கு தோன்றும். 

கடவுளாக விலங்குகளை நாம் வழிபட்டாலும், நம்மால் வீட்டில் வனவிலங்குகளை வளர்க்க முடியாது. ஏனென்றால் நம் நாட்டு (இந்தியா) சட்டம் அதற்கு இடம் தராது. 

ஆனால் நம்முடைய ஏக்கம் நீண்ட நாள் நீடிக்காமல், நமது ஆசையை நிறைவேற்ற போகிறது வண்டலூர் உயிரியல் பூங்கா. எப்படி? இந்தப் பூங்காவில் இருந்துதான் நாம் மிருகங்களை தத்து எடுத்து வளர்க்கப் போகிறோம். 

ஏற்கெனவே மைசூர் உள்ளிட்ட சில உயிரியல் பூங்காக்களில் விலங்குகளை பொதுமக்கள் தத்து வளர்க்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இப்போது, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலும் மிருகங்களைத் தத்து எடுப்பதற்கு அனுமதியளிக்க இப்பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

1855ல் தேற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். சென்னையிலிருந்து 30 கீ.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்காவில் 170க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளது. இந்தத் திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என நிர்வாகம் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போது இத்திட்டத்தின்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை தனிப்பட்ட ஒருவருக்கு எத்தனை நாள்களுக்கு தத்து கொடுப்பது என்பது பற்றி ஓர் முடிவுக்கு வந்துள்ளது பூங்கா நிர்வாகம்.

இந்த புதிய திட்டத்தின்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை ஒருவர் ஓராண்டு வரை தத்து எடுத்துக்கொள்ளலாம். அந்த காலகட்டத்தில் விலங்குக்கு ஆகும் செலவுக்கு அவர் பொறுப்பு ஏற்கலாம். அதிகபட்சமாக ஓராண்டும், குறைவாகக் கூட மாதக்கணக்கிலோ, நாள்கணக்கிலோ கூட தத்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான கட்டணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. 

இதுபோன்ற திட்டம் ஒன்று புளூகிராஸ் நிறுவனத்தில் தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது. நம் வீட்டில் நாய், பூனை, கிளி போன்றவை வளர்க்க ஆசைப்பட்டு, அது வளர்ந்த பின்னர் ஏதோ ஒரு சூழ்நிலையில் வளர்க்க முடியாமல் போனால், புளூகிராஸ் நிறுவனத்தில் நாம்வளர்த்த பிராணியை வளர்ப்பதற்கு, பராமரிப்பதற்கு வசதிகள் இருக்கின்றது. அவர்கள் அந்தப் பிராணியை பராமரிப்பதோடு, அது எப்படி இருக்கிறது என்பதையும் நமக்குத் தெரிவிப்பார்கள்.

ஆனால் இந்தத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என நாம் நம்பலாம்.

மிருகங்களைத் தத்து எடுக்கும் அமுலுக்கு வந்தவுடனே நாம் ஆளுக்கொரு மிருகத்தைத் தத்து எடுக்கலாம். அதனைப் பெருமையாகவும் சொல்லிக் கொள்ளலாம். நான் நாய் வளர்க்கிறேன். பூனை வளர்க்கிறேன். கிளி வளர்க்கிறேன் என்பதுபோல நான் சிங்கம் வளர்க்கிறேன், புலி வளர்க்கிறேன் என்றும் நாம் சொல்லிக்கொள்ளலாம்.

யானைக் கட்டிப் போரடிக்க முடியுமா? என்று எண்ணியிருந்த காலம் போய் இந்தத் திட்டத்தால் நாம் பூனையும் வளர்க்கலாம், யானையும் வளர்க்கலாம்.

எங்கே எல்லாரும் கிளம்பிட்டீங்க? வண்டலூருக்கா?


(30.03.2009இல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

புதன், ஏப்ரல் 01, 2009

பொங்கியெழு வைகோ!

3 கருத்துகள்



இன்னுமா யோசனை?

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன். அதன்பின் எந்தக் கட்சி எந்தக் கட்சியுடன் கூட்டணி என்ற அமர்க்களம் முடிந்தது. தமிழ்நாட்டில் கூட்டணி காட்சியில் மிக சிறப்பாக பங்காற்றியவர்கள் விஜயகாந்தும், ராமதாஸும்தான். இவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களை இதோ, அதோ என்று போக்குக் காட்டியது திரைப்படத்தில் வரும் சேஸிங் சீனை விட விறுவிறுப்பாக இருந்தது என்றே சொல்லலாம்.

அடுத்து தொகுதி பங்கீடு.

விஜயகாந்த் தனித்துப் போட்டி என்பதால் பிரச்னையே இல்லை.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் மிகச் சுலபமாக தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது.

பாஜக கூட்டணி என்று ஒன்று உள்ளதாக கூறுகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் டாக்டரண்ணனுக்கு லம்ப்பா 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கு தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அதிமுகவே கதி என்றிருந்த மதிமுக எத்தனை தொகுதி? என இதுவரை இரண்டு கட்சிகளும் வெளிப்படையாக கூறவில்லை. ஜெயலலிதா மதிமுகவுக்கு எத்தனை தொகுதி ஒதுக்குவார்? ஏழா? ஐந்தா? நான்கா? மூன்றா? இரண்டா? போதும் போதும் இதற்குமேல் என்ன சொல்ல.

‘பொறுத்தது போதும் பொங்கியெழு!’

கலைஞர் வசனம்தான் என்றாலும் தற்போது ‘வைகோ’வுக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது.

வைகோ சிறந்த பேச்சாளர், சிறந்த தொண்டன். ஆனால் சிறந்த தலைவரா என்றால் மறுப்பவர்கள் அதிகம்.

கட்சியைப் பொறுத்தவரையில் கட்சி நிர்வாகிகளை அனுசரித்து, அரவணைத்துச் செல்லும் திறமை வைகோவிடம் இல்லை. வைகோ பின்னால் சென்றவர்கள் எல்லாம் மீண்டும் வந்துவிட்டார்கள். ஒருத்தர் பின் ஒருத்தராக சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். கேட்டால் மதிமுக உடைக்க கலைஞர் சதி செய்கிறார் என்பார்?

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதில் எவ்வித உபயோகமும் இல்லை. ஆனால் வைகோ திரும்ப திரும்ப அரைத்துக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவருக்கு அரசியல் தெரியவில்லை என்று பலர் கூறுகின்றனர். வைகோ வாய் சொல்லில் வீரனாக மட்டுமே இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

நேற்று முளைத்த தேமுதிக தனித்து நிற்கிறது. சமக (சரத்குமார் கட்சி) புத்திசாலித்தனமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. எப்படியும் 15 தொகுதிகளில் நிற்கலாம் என தெரிகிறது. பிறந்து 15 மாதங்கள் ஆகாத கட்சிகள்கூட புத்திசாலித்தனமாக இருக்கிறது.

மதிமுக பிறந்து இந்த மே மாதம் வந்தால் 15 வயது பூர்த்தியாகப் போகிறது. ஆனால் ஆரம்பித்தபோது இருந்த நிலையைவிட தற்போது அதிக அளவு தேய்ந்து, தளர்ந்து காணப்படுகிறது.

மதிமுகவை காப்பாற்றுவாரா வைகோ?

செவ்வாய், மார்ச் 31, 2009

மரமண்டைகள்

0 கருத்துகள்
சாலையோர மரங்களைச் சீர் செய்வோம்!

சென்னையில் சில சாலைகளில் திரும்ப திரும்ப போக தூண்டும். நம்மில் சிலர் அந்தச் சாலைகளில் காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி செல்வதற்கும் ஏதுவாக இருக்கும். அமைதியாகவும், காற்றோட்டமாகவும், நல்ல மன ஒட்டத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அந்த சாலைகள் இருக்கும். அது எந்த மாதிரியான சாலை தெரியுமா? அடர்ந்த மரங்கள் நிறைந்த சாலைகள்தான் அவை.

சென்னையில் மயிலாப்பூர், போர்ட் கிளப் சாலை, போயஸ் கார்டன், மந்தவெளி, அடையாறு, பெசண்ட் நகர், கே.கே. நகர், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இப்படி அடர்ந்த மரங்கள் நிறைந்த சாலைகள் அதிகம் காணப்படுகிறது. அமைதியான சாலையாகவும், காற்றோட்டமான சாலையாகவும், அடிக்கடி பறவைகள் கூவுகின்ற ஒலிகளும் இங்கு கேட்பதால் இந்த ரம்மியமான சாலையில் செல்ல அனைவரும் விருப்பப்படுவார்கள்.

இந்தப் பகுதிகளிலெல்லாம் எப்பொழுது இந்த மரங்கள் நடப்பட்டன என்றால் அந்தப் பகுதி மக்களுக்குக் கூட தெரியாது என்று சொல்லலாம். அத்தனை வருடங்கள் இந்த மரங்கள் அந்தப் பகுதி மக்கள் வெயிலில் வாடாமல் காத்து வருகிறது. சொல்லப்போனால் மக்களோடு மக்களாகவே வாழ்ந்து வருகிறது என்று கூறலாம்.

பள்ளிப் படிக்கும் காலத்தில் அசோகர் சாலையோரத்தில் மரத்தை நட்டார் என்று படித்திருக்கிறோமே தவிர அந்தப் பருவத்தில் மரத்தின் பயன்கள் பற்றி அறிய வாய்ப்பு குறைவு. அதன் பயன் இப்போது புரிகிறது. மரங்கள் வெயில் காலங்களில் நல்ல நிழல், குளிர்ந்த காற்று கிடைக்கிறது என்றாலும் சில இடைஞ்சல்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒருநாள் நான் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று என் தலையில் ஏதோ விழுந்தது. என்னவென்று பார்த்தேன். காய்ந்த சிறிய மரக்கிளை. நல்லவேளை ஹெல்மெட் அணிந்திருந்தேன். தலைக்கு வந்தது ஹெல்மேட்டோடு போச்சு. எதனால் இப்படி?

சமீப காலத்தில் நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை என்று பார்க்கும்போது மிகவும் குறைவுதான். மரங்களெல்லாம் நடப்பட்டு, வளர்ந்து நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டதால், மரங்களுக்கும் வயதாகி விட்டது.

நீண்டு, நெடிய மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் சாலையிருக்கும் விளக்குகளின் வெளிச்சம் சாலையில் சரிவர தெரிய மறுக்கின்றது. அதேசமயம் மரங்களின் மேல்தான் கேபிள் ஓயர்கள் அதிகம் செல்கின்றன.

மழைக் காலங்களில் சில மரங்கள் வேரோடும் சாய்ந்து விடுகின்றன. சில இடங்களில் மரங்களின் கிளைகளும் ஓடிந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, ஆமை வேகத்தில் வாகனங்கள் செல்வது வாடிக்கை. அன்றைய தினம் அந்த வழியாகச் செல்லும் அத்தனை பேரும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்.

இலையுதிர் காலத்தில் மரங்களிலுள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து, சருகாகி சாலையில் விழுந்து குப்பையாகி, வீதிகளைக் குப்பையாக்குவதோடு நில்லாமல் காற்றில் பறந்து அந்தப் பகுதியையும் அந்த பகுதியிலுள்ள வீடுகளும் குப்பையாகின்றன. உதிர்ந்த சருகுகளால் கால்வாய்களும் அடைத்துக் கொள்கின்றன. இதனால் சாக்கடையில் நீர் போக வழியில்லாமல் நிரம்பி வழிவதோடு, கொசுக்களும் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.

மழைக் காலங்களில் வேகமாக அடிக்கின்ற காற்றில் முதிர்ந்த மரங்கள் வேரோடு கீழே சாய்கின்றன. அப்படி சாயும்போது மரத்திற்கு அருகிலிருக்கும் வீடுகள், கடைகள், வாகனங்கள் போன்றவை சேதமுறுகின்றன. மரங்கள் சாய்ந்து விழும்போது, கேபிள் ஓயர்களும், டெலிபோன் ஓயர்களும், சில சமயம் மின்சார கம்பியும் அறுந்து கீழே விழுகின்றன. ஓயர்கள் அறுந்துகிடப்பதை அறியாத ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் மின்õசரத்துக்கு பழியாக நேரிடுகின்றன. சில சமயங்களில் மனிதர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

என் நண்பர் ஒருவர் வீட்டுக் காம்பவுண்ட் சுவருக்கு அருகில் இரண்டு மரங்கள் இருக்கின்றன. ஒரு மரத்தின் கிளை அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு அருகில் செல்கிறது. இதனால் சமூக விரோதிகள் மரத்தின் வழியாக நுழைந்து விடுவார்களோ? என்று பயப்படுகிறார். அவர் பயப்படுவதும் நியாயம் தானே?

இன்னொரு நண்பரின் புலம்பல் வேறுவிதமாக உள்ளது. ‘தண்ணி வரலேன்னு கொஞ்சம் கொஞ்சம் அதிக ஆழத்தில் ஃபோர் போட்டிருக்கேன். இப்பப் பாத்தா வெளியில இருக்கிற மரத்தோட வேர் குறுக்கே போகுது. என்ன பண்ணுறது?’ என்கிறார்.

சில சாலைகளில் மரங்கள் வளைந்தும் நெளிந்தும் வளர்ந்திருக்கின்றனர். இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோரின் தலை மரத்தில் மோதுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே வளைந்து நெளிந்து செல்லும் மரங்களை சீர்படுத்தினால் நன்றாக இருக்கும். சில சாலைகளில் மாநகர் பேருந்துகளே செல்வதற்குத் தடையாக இருக்கிறது மரங்கள்.

இவற்றையெல்லாம் சென்னை மாநகராட்சி கண்டறிந்து சீரமைப்பது அவசியமாகிறது. அதுபோல சில மரங்கள் இலைகளே இல்லாமல் பிரம்மாண்டமாக நிற்கின்றன. சில மரங்களில் இலைகள் இல்லாத கிளைகள் இருக்கின்றன. இவ்விரண்டையும் சரி செய்தால் ஓரளவு தீர்வு காணமுடியும்.

சில மாதங்களுக்கு முன் பாண்டி பஜார், பனகல் பார்க் போன்ற சில இடங்களில் சென்னை மாநராட்சி தேவையற்ற மரங்களை வெட்டி இருக்கிறார்கள். மரம் வெட்டுவதைக் கண்டவர்கள் ‘ஐயோ இப்படி மரங்கள வெட்டுகிறார்களே’ என்று கூறியவர்கள் அதிகம்தான்.

நாம் ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடன், ஒரு மரத்தை நடவேண்டும் என்று அரசு கூறுகிறது. அதே சமயத்தில் தேவையற்ற மரங்களை அகற்றுவதை தவறு என்று சொல்ல முடியாது. சரி தேவையற்ற மரங்கள் என்றால் எவை? முதிர்ந்த மரங்கள், இலைகளே இல்லா மரங்கள், சாலையில் குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்து நிற்கும், கிளைகள் போன்றவைதான். இவைகளை அகற்றுவதில் என்ன தவறு இருக்கிறது?

எனவே நீண்ட காலமாக சாலையோரங்களில் இருக்கும் மரங்களை தேவையானால் அகற்றுவதும், சரியாக பராமரிக்க வேண்டியதும் இப்போதைய உடனடித் தேவை.
0
(26.03.2009 அன்று ஆல் இண்டியா ரேடியோ “நகர்வலம்’ பகுதியில் வாசிக்கப்பட்டது.)