மௌனம் ஏன்?
‘தமிழர்களின் 150 வருட கனவான சேதுசமுத்திர திட்டத்திற்காக நான் பாராளுமன்றத்தில் எத்தனை முறை பேசியிருக்கிறேன். சேதுசமுத்திரத் திட்டம் குறித்து அதிகம் பேசியவன் நான்தான்.’
இப்படி சேதுசமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் பேசியவர் வேறுயாருமல்ல நம்ம தன்மான சிங்கம் வைகோதான்.
அவர் மட்டுமல்ல இந்திய கம்யூனிஸ்ட் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் வரதராஜன், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வரவேற்று, நிறைவேற போகும் சந்தோசத்தில் பேசியதை நாம் மறந்திருக்க மாட்டோம்.
ஆனால் 2 நாள்களுக்கு முன்பு அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில், அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடபட்டது. வெளியிட்டவர் ஜெயலலிதா. பெற்றுக்கொண்டவர் பிரகாஷ் காரத். அறிக்கையில் நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களுக்கு சேதுசமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பாமக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது. மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.
நான்தான் இந்தத்திட்டம் நிறைவேற காரணமானவன் என்று தொடக்கவிழாவில் சேதுசமுத்திரத் திட்டம் தோன்றியதிலிருந்து தொடக்க விழா வரை பேசிய வைகோ. இப்போது மௌனம் காப்பது ஏன்?
கூட்டணியில் இருக்கும் மற்றக் கட்சிகளை விடுங்கள். வைகோ இதையறிந்த பின்னும் சும்மா இருக்கலாமா? சிங்கம் போல சீறியெழும் வைகோ இதுபற்றி வாய்திறக்காது ஏன்? தொகுதிகளில் ஒதுக்கீடு செய்ததிலிருந்து வைகோவின் மௌனம். அவரை மட்டுமல்ல, அவரது தொண்டர்களை மட்டுமல்ல. நம்மையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ஏன் இந்த மௌனம்?