வெள்ளி, ஜனவரி 16, 2009

2 கருத்துகள்

மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு

இந்த பொங்கலன்று தொலைக்காட்சிகள் எல்லாம் சின்னத்திரையில் முதல் முறையாக என்று படப் பொங்கல் வைத்தன. நான் அந்தத் தொல்லைக்காட்சிகளையெல்லாம் பார்க்காமல் இருந்ததற்கு என் அப்பாவிற்கு நன்றியைச் சொல்லிக்கொள்ள வேண்டும். மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்க நேர்ந்தது. மக்கள் தொலைக்காட்சியில் ‘மக்கள் விருது - 2008’ என்ற விருதினை சிறந்த கல்வியாளர், சிறந்த கிராமம், சிறந்த சுயஉதவிக் குழு, சிறந்த மருத்துவர், சிறந்த விவசாயி, சிறந்த பதிப்பகம், சிறந்த ஓவியர், சிறந்த எழுத்தாளர், சிறந்த ஆவணப்படம், சிறந்த குறும்படம், சிறந்த மாற்று திறனாளர், சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த மழலை மேதை என்று 31 பேருக்கு வழங்கினார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இதுவரை திரையுலகம் பக்கமே தலைசாய்க்காத மக்கள் தொலைக்காட்சி முதன்முறையாக சிறந்த திரைப்படமாக ‘பூ’ படத்தினைத் தேர்வு செய்து அதற்கும் விருது வழங்கியுள்ளார்கள். சில விருதுகளை மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து வழங்கியது மனதை நெகிழ வைத்தது. மக்கள் தொலைக்காட்சி தனக்கென்று ஒரு பாணி வைத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயமாகும். சிறந்த தொலைக்காட்சி எதுவென்று கேட்டால் ‘மக்கள் தொலைக்காட்சி’யை யார் கேட்டாலும் சொல்லலாம்.

திங்கள், ஜனவரி 12, 2009

0 கருத்துகள்
மார்கழியும் மாணவர்களும்

‘பையன் படிக்கச் சொன்னா, மாட்டேங்கிறான். என்ன செய்யுறதுன்னே தெரியலை. உங்ககிட்டதான் நல்லா பேசுவானே. கொஞ்சம் என்னான்னு கேளுங்களேன் சார்’ என்று புலம்பினார் பக்கத்து வீட்டு நண்பர்.
பக்கத்து வீட்டுப் பையன் படிப்பில் கெட்டிக்காரன். வகுப்பிலேயே, ஏன் பள்ளியிலேயே அவன்தான் முதல் மதிப்பெண் வாங்குபவன். அவனைப் பற்றி அவனுடைய தந்தையே இப்படிப் புகார் சொன்னதும் அதிர்ந்துபோனேன்.
அன்று மாலை - அந்தப் பையனிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘என்னப்பா! நீ நல்லா படிக்கிற பையனாச்சே! படிக்க சொன்னா மாட்டேங்குறியாமே! என்ன பிரச்னை?’  என்று மெதுவாகக் கேட்டேன்.
அந்த பையனுக்கு என்மீது அன்பும் மதிப்பும் உண்டு அதனால் நான் சொல்வதைக் கேட்டு அவனுக்குக் கோபம் வரவில்லை, அங்கிள், நானும் காலையில எந்திரிச்சு படிக்கணும்தான் உக்கார்றேன். ஆனா,  நான் படிக்க உட்காரும்போது ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ன்னு பக்கத்துலருக்குற கோயில்ல இருந்து லவுட் ஸ்பீக்கர் அலற ஆரம்பிச்சுடுது. அந்த சத்தத்துல என்னால படிக்க முடியல. என்ன செய்யறது? நீங்க  சொல்லுங்க’ என்றான்.
ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கும் போகத் தயாராகும் காலம். ஆண்டுக்கு ஆண்டு இந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கண்டிப்பாக அருகிலிருக்கிற வீடுகளிலோ, சிறு கோயில்களிலோ மாலையில் பஜனை இருக்கும். அதற்கு முன்னோட்டமாக காலையில் பாடல்களை ஒலிபரப்புவார்கள். அதுதான் அந்தப் பையன் விஷயத்திலும் நடந்திருந்தது.
அவன் கூறுவது சரிதான். இது டிசம்பர் மாதம். இந்த மாதத்தில் நாம் அதிகம் கேட்கக் கூடியதாக வார்த்தைகள் ‘சாமி! ஐயப்பா’வாகத் தான் இருக்கும். கூடவே மார்கழி பிறந்துவிட்டால் எல்லாக் கோயில்களிலும் அதிகாலை நான்கு மணிக்கே ஸ்பீக்கர்கள் வழியாக, பக்திப் பாடல்கள் வீதிகளுக்குள் உலாவர ஆரம்பித்துவிடும்.
பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் காலம் இது. பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவியர்கள் அனைவரும் தேர்வுக்கு படிக்கின்ற முக்கியமான நேரம் அதிகாலை நேரம்.
அதுவும் பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு  இது முக்கியமான மாதமாகும். இந்த மாதத்தில் இருந்துதான் இதுவரை படித்த மாணவர்களும், படிக்காத மாணவர், மாணவிகளும் போட்டி போட்டுக்கொண்டு படிப்பார்கள். ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தங்களின் ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்  என்கிற அக்கறையோடு அதிகாலையில் எழுந்து படிக்க ஆரம்பித்தால், இரவு படுக்கும்வரை படிப்பு, படிப்பு, படிப்பு என அதிலேயே மூழ்கிப் போவார்கள். கண்ணும் கருத்துமாக படித்து பாடங்களின் விவரங்களை அத்தனையையும் கைவிரல் நுனியில் வைத்திருப்பார்கள். 
அதிகாலையில் படிப்பு, பள்ளியில் சென்று படிப்பு, மாலையில் கோச்சிங் கிளாஸில் படிப்பு, திரும்ப வீட்டுக்கு வந்ததும் படிப்பு, இரவு 12 மணிவரை படிப்பு என இருபத்தினான்கு மணிநேரமும் படிப்பைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை என்பதுபோல் படிக்கிறார்கள் மாணவர்கள். உண்மையில் இந்த மாணவர்களின் படிப்புக்குச் சற்று சிரமம் தருவதாகத்தான் இருக்கிறது இப்படி ஒலிபெருக்கி வழியாக வரும் இசைப்பாடல்கள்.
மாணவர்களுக்கு இன்னும் சில நாளில் தேர்வுகள் தொடங்கிவிடும். அரையாண்டுத் தேர்வுகள், ரிவிஷன் டெஸ்டுகள், ஆண்டு இறுதித் தேர்வு என தேர்வு மயமாக இருக்கும்.
ஏற்கெனவே வடகிழக்குப் பருவ மழை அதிகம் பெய்த காரணத்தினால் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சில மாணவர்களின் பாடப் புத்தகங்களும் மழை வெள்ளத்தில் அடித்துச் சென்ற பரிதாபமும் நமக்குத் தெரியும். 
அவர்களுக்கு எல்லாம் இப்பொழுதுதான் அரசு பாடப்புத்தகங்களைக் கொடுத்து கொண்டிருக்கிறது. இனிமேல்தான் அவர்கள் படிக்க வேண்டும். எழுதிவைத்த நோட்டுகள் எல்லாம் போனதினால் தற்போது அவர்கள் முதலில் இருந்து மீண்டும் படிக்க வேண்டிய சூழ்நிலை. மாணவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் இவர்களுக்குமேகூட இப்படி ஒலிபெருக்கிகள் வழியாக சத்தமாக ஒலிக்கும் பாடல்கள் சற்றுத் தொந்தரவானவைதான்.
மாணவர்களாவது பள்ளிக்கு சென்று அல்லது கோச்சிங் கிளாசில் படித்துவிடுவார்கள். ஆனால் வயதானவர்களும், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், குழந்தைகளும் எங்கு செல்வார்கள்?
சில இடங்களில் பூஜை செய்வதோடு நில்லாமல் அன்னதானமும் செய்கிறார்கள். அன்னதானம் செய்வது நல்ல விஷயம்தான். ஆனால் அன்னதானம் முடிந்தபின் எச்சில் இலைகளை சாலையில் ஏதோ ஒரு மூலையில் வீசுவிடுகிறார்கள்.
சாலையோரத்தில் இதுபோன்ற எச்சில் இலைகளை கொட்டுதால் சுகாதாரம் கெடுகிறது.
எச்சில் இலைகளை மொய்க்கின்ற ஈ, கொசுக்கள் கடித்தால் பல்வேறு நோய் பரவும்.
நம் உடல் நலம்தான் பாதிக்கும்.
இதனையெல்லாம் தவிர்ப்பதற்கு என்ன வழி? 
ஐயப்பனுக்கு பூஜை செய்கிறவர்கள் தங்களின் வீட்டுக்குள்ளே பூஜை  செய்து, ஐயப்பனின் பக்திப் பாடல்களை தங்களுக்கு மட்டுமே கேக்கும்படி சத்தத்தை வைத்துக் கேட்டால் யாருக்கும் தொந்தரவு இருக்காது.  இப்படி செய்தால் அவர்களுக்கும் பூஜை செய்த மாதிரி இருக்கும். பள்ளி மாணவர்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கும்.
அதுபோல தங்களின் வீட்டிற்குள்ளே அனைவரையும் அழைத்து அன்னதானம் செய்து இலைகளை ஒரு ஓரமாகப் போட்டால், மறுநாள் குப்பை லாரிகள் வந்து அள்ளி செல்வதற்கு வசதியாக இருக்கும். நமது சுற்றுப்புற சுகாதாரம் கெடாது. நாமும் நலமாக இருக்கலாம். 
இவையெல்லாவற்றையும் விட மார்கழி மாதத்தில், அதிகலையில் கோயில்களில் இருந்து கிளம்பும், பக்திப் பாடல்களை பெரிய ஒலிபெருக்கிக் குழாய்கள் மூலமாக ஒலிபரப்பாமல், சிறிய அடக்கமான ஸ்பீக்கரில் கோயிலுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ஒலிபரப்பினால் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். செய்வார்களா?

(20.12.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)
0 கருத்துகள்
தேவை பராமரிப்பு

நண்பர் ஒருவரை தினமும், மாலையில் திருமயிலை ரயில் நிலையத்தில் என் பைக்கில் கொண்டு விடுவது வழக்கம். அன்றும் அப்படிதான் அவரை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு, ஓர் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒரு டியூப் லைட் எங்களுக்கு அருகில் விழுந்து உடைந்தது. அது என் நண்பரின் முகத்தைப் பதம் பார்க்க வேண்டியது. கொஞ்சம் தள்ளி விழுந்தததால் நண்பர் தப்பித்தார்.
டியூப் லைட் வந்த திசையைப் பார்த்தோம். ரயில் நிலையத்தின் அருகில் வசிக்கும் சிறுவர்கள் சிலர் விளையாட்டாக டியூப் லைட்டை கால்வாயில் வீச முற்பட, அது தவறி ரயில் நிலைய படிக்கட்டுகளுக்கு அருகில் விழுந்திருந்தது.
1997ம் ஆண்டு, அக்டோபர் மாதம், திருமயிலை ரயில் நிலையம் திறக்கப்பட்டு, திருமயிலையிலிருந்து கலங்கரை விளக்கம், திருவல்லிகேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, பூங்கா, கோட்டை வழியாக மின்சார ரயில் கடற்கரை நிலையத்தைச் சென்று அடைகிறது.இப்பொழுது மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரி வரைக்கும் சென்று திரும்புகிறது. பீச் ஸ்டேஷன், வேளச்சேரி இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கும் மையமாக விளங்குகிறது திருமயிலை ரயில் நிலையம். தினமும் சுமார் 100 தடவைக்கும் மேல் திருமயிலை ரயிலை நிலையத்தைக் கடந்து செல்கின்றன ரயில்கள்.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல், அதனால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள், இதனைக் கருத்தில் கொண்டு, பறக்கும் ரயில் திட்டம், செயல்படுத்தப்பட்டது. மயிலாப்பூரிலிருந்து பாரிமுனைக்குப்  பேருந்தில் சென்றால் குறைந்தபட்சம் அரைமணி நேரம் ஆகும். அதேபோல் வேளச்சேரிக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு மணிநேரம் ஆகும். வேளச்சேரியிலிருந்து பாரிமுனைக்கு செல்வதென்றால் சுமார் ஒண்ணரை மணி நேரமாவது ஆகும். இந்த நேர கணிப்புகளெல்லாம் போக்குவரத்து நெரிசல் இல்லாதபோதுதான் சாத்தியம். பறக்கும் ரயில் மூலம் மயிலாப்பூரிலிருந்து பாரிமுனைக்கு 15 நிமிடங்களிலும், வேளச்சேரிக்கு 15 நிமிடங்களிலும், வேளச்சேரியிலிருந்து கடற்கரைக்கு அரைமணி நேரத்திலும் செல்ல முடியும். இதனால் மக்களுக்கு நேரமும் மிச்சமாகிறது.
திருமயிலை ரயில் நிலையத்திலிருந்து முன்புறமாக இறங்கி சென்றால் வலதுபுறம் கபாலீஸ்வரர் கோயிலுக்கும், இடது புறம் லஸ் கார்னருக்கும் செல்லலாம். பின்புறமாகச் சென்றால் சாயிபாபா கோவிலுக்குச் செல்லலாம்.
இவ்வளவு வசதிகளை அள்ளித்தரும் , பொது மக்களுக்குப் பயன்தரும் திருமயிலை ரயில் நிலையம் சரியான பராமரிப்பினால் இருப்பதுதான் சற்று சங்கடத்தைத் தருகிறது.
ரயில்கள் நின்று செல்லும் நடைபாதைகள் இரண்டாவது மாடியில் இருக்கின்றன.  அதிகாலை நான்கரை மணியிலிருந்து நள்ளிரவு வரை ரயில்கள் வந்தும் போய்க் கொண்டுமிருக்கும்.
ரயில் நிலையக் கட்டடத்தின் முதல் மாடியில் முன்பதிவு அலுவலகமும், ஆர்.வி.என்.எல். என்ற ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
தரைத் தளத்தில் காவல் நிலையமும், துணை மின்நிலையமும் இருக்கின்றன. லிப்ட்டுகளும், நகரும் மின் ஏணிகளும் இருக்கின்றன.
நிலையத்தின் முன்புறத்திலும், பின்புறத்திலும் பயணச் சீட்டுக் கொடுக்கும் கவுண்ட்டர்கள் இருந்தாலும் தற்போது முன்புறத்திலுள்ள கவுண்ட்டர் மட்டுமே இயங்குகிறது. பின்புறத்தில் செயல்படவில்லை. ‘பீக் ஹவர்ஸ்’ என்று சொல்லப்படுகிற பரபரப்பான காலை, மாலை வேளைகளில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. முன்புறத்தில் இருக்கும் கவுண்ட்டரில் இந்த நேரத்திலாவது இரண்டு கவுண்ட்டர்கள் செயல்பட்டால் பயணிகள் பயனடைவார்கள்.
இங்கே, தானியங்கி பயணச் சீட்டு இயந்திரம் ஒன்று இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் அதனை மக்கள் பயன்படுத்துவதில்லை. அதுபோல ப்ரீ பெய்டு கார்டு இயந்திரம் இரண்டு இருக்கின்றன.  அதனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் மிக குறைவுதான்.
பல கோடி ரூபாய்களில் தயாரான மயிலாப்பூர் ரயில் நிலையம் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என வேதனை அடைகின்றனர் மயிலாப்பூர்வாசிகள். ரயில் நிலையத்தின் முன்புறமும், பின்புறமும் 24 மணி நேரமும் யாராவது சிலர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரயில் நிலையத்தின் பின்பகுதியைக் கொல்லைப்புறம் என்றே சொல்லலாம். ஆடு, நாய் போன்றவைகள் படிக்கட்டுகளில் ஏறி அசுத்தம் செய்கின்றன. பின்புறத்தில் சாயிபாபா கோயில் வரைக்கும் உள்ள பிரம்மாண்டமான தூண்கள் இரவானால், விளக்கு இல்லாத காரணத்தினால் கழிப்பிடமாக மாறுகின்றன. இரவு நேரத்தில் இந்தப் பக்கம் வருவதற்கே பயப்படுகிறார்கள் பொதுமக்கள்.
வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சாயிபாபா கோயிலுக்கு வரும் கார்கள் நிறுத்துமிடமாக இந்த இடம் உருமாறுகிறது. 
ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதியில் சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடுவதால், கட்டடத்தின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்த நிலையில் இருக்கின்றன. ஆங்காங்கே செடிகள் முளைத்திருக்கின்றன. அவ்வபோது தேன்கூடுகூடத் தென்படும்.
ரயில் நிலையத்தை உரிய முறையில் பராமரித்து, பின்புறத்தில் டிக்கெட் கவுண்டர் ஒன்றைத் திறந்து செயல்பட வைக்கலாம். இருட்டான பகுதிகளில் நன்கு வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை பொருத்தினால் அந்த இடத்தைப் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க முடியும். முன்புறமும், பின்புறமும் சிலர் தூங்குவதை தடுப்பதற்கு இரண்டு பக்கமும் எப்போதும் காவலைத் துரிதப்படுத்தலாம். அவ்வபோது கட்டடத்தில் குவிகிற குப்பைகளையும், முளைக்கின்ற செடிகளையும் அப்புறப்படுத்தி, சுத்தம் செய்யலாம்.
சென்னையின் புராதனமான நகர்ப் பகுதி திருமயிலை.
உரிய முறையில் பராமரிக்கப்பட்டால், ‘திருமயிலை ரயில் நிலையம்’ அந்தப் பகுதிக்கே பெருமை சேர்க்கும்.

(19.12.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)
0 கருத்துகள்
மூச்சு முட்டும் நெரிசல்.

அது ஒரு காலை நேரம். குழந்தையை இரு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒரு சாலையைக் கடக்க வேண்டியிருந்தது. ஹாரன் அடித்துவிட்டுக் கடந்தேன்.  பாதிதூரம் போயிருப்பேன். அப்போதுதான் அந்த ஆட்டோ வந்தது. வலதுபக்கத்திலிருந்து படு வேகமாக, வந்தது. நான் சட்டென்று பிரேக்கைப் போட்டு என் வண்டியை நிறுத்திவிட்டேன். நல்லவேளையாக அந்த ஆட்டோவும் நின்றுவிட்டது. அந்த ஆட்டோவுக்குள் பள்ளிக் குழந்தைகள் இருந்தார்கள்.  எப்படியும் பத்து குழந்தைகளாவது இருப்பார்கள். 
‘ஏம்பா! ஆட்டோல குழந்தைகள வைச்சுகிட்டு இவ்வளவு வேகமா வர்றியே! கொஞ்சம் மெதுவாக வரக்கூடாதா?’ என்று ஆட்டோ ஒட்டுநரிடம் கேட்டேன்.
‘உனக்கென்னய்யா தெரியும்? இன்னும் ரெண்டு டிரிப் அடிக்கணும். உன் வேலைய பாத்துகிட்டு  போய்யா!’ என்று சொல்லிவிட்டு ஆட்டோவை ‘விருட்’டென்று எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் அந்த ஆட்டோ நண்பர். அவருடைய குரலில் எரிச்சல் விரவிக்கிடந்தது. நான் அந்த ஆட்டோ டிரைவரைக் குறை சொல்லவில்லை. சாலைகள் குறிக்கிடும்போது, குறைந்தபட்சம் ஹாரனை ஒலிக்கவேண்டும் என்கிற அடிப்படைகூடத் தெரியாதவரா அந்த ஆட்டோக்காரர்? இல்லை. ஆனால், அவசரம். காலில் சக்கரம் முளைத்த மாதிரியான அவசரம். அதுதான் அவரை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது.
தினமும் காலை 7 மணி முதல் 9,30 மணி வரைக்குமான நேரம் பரபரப்பான நேரம். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் அனைவரும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். வீட்டில் மட்டும் இல்லாமல்,  சாலைகளிலும் அந்தப் பரபரப்புத் தெரியும். 
கிடைக்கிற சிறிய இடைவெளியிலும் மூக்கை நுழைத்துச் செல்ல முயலும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள். தனக்கும், தன் காருக்கும் எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில் கார் ஒட்டுநர்கள். வேகமாக வந்து பயமுறுத்தும் தனியார் வேன்கள். குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வேன்கள், பேருந்துகள். இப்படி விதவிதமான வாகனங்களை இந்தநேரத்தில் பார்க்கலாம்.
இரு சக்கர வாகனத்தில் ஒருவர் சென்றுகொண்டிருப்பார். அவரைத் தவிர முன்னால் ஒரு குழந்தை, பின்னால் இரண்டு குழந்தைகள் இருப்பார்கள்.  கூடவே குழந்தைகளின் பள்ளிக்கூடப் பைகளும்  சாப்பாட்டுக் கூடையும் இருபக்கமும் தொங்கிக்கொண்டிருக்கும். 
குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவில் எட்டுக் குழந்தைகளாவது இருப்பார்கள்.  ஆட்டோவின் இரு புறங்களிலும் பிதுங்கி வழிகிற மாதிரி அவர்களுடைய பைகள் நீட்டிக்கொண்டிருக்கும். இது தவிர படு வேகமாகக் குழந்தைகளை ஏற்றி வரும் கார்கள். இந்த வாகனங்கள் அனைத்தும் மெதுவாக வருகின்றனவா  என்றால்  அதுதான் இல்லை. குழந்தைகளை ஏற்றிச் செல்கிறோமே என்கிற பொறுப்பில்லாமல்தான் பல வாகனங்கள் சாலைகளில் தலைதெறிக்க விரைகின்றன.
குழந்தைகளை சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பது நல்ல எண்ணம்தான். ஆனால், அதற்காக சாலைகளில் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டுவது நமக்கும் நல்லதல்ல, நம் குழந்தைகளுக்கும் நல்லதல்ல.
‘சென்னை முழுவதும் இந்த நேரத்தில் வாகன நெரிச்சல் ஏற்படுகிறது’ என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அதுவும் தென்சென்னையில் இந்த நெரிசல் மிக அதிகம். அதற்குக் காரணம், மயிலாப்பூர், சாந்தோம், மந்தைவெளி பகுதிகளில்  சுமார் 50 மேற்பட்ட பள்ளிகள் இருப்பதுதான். 
குறிப்பாக மயிலாப்பூர் சாயிபாபா கோவிலைச் சுற்றி நிறைய பள்ளிகள் இருக்கின்றன. அர்ச்சுனனுக்கு கிளியின் கழுத்து மட்டுமே குறியாக தெரிந்ததுபோல, இந்தப் பள்ளிக்கு வரும் வாகன ஒட்டிகளுக்கு பள்ளியில் குழந்தைகளை எப்படியாவது விட்டுவிட வேண்டுமென்ற எண்ணம் மட்டும்தான் இருக்கிறது. அதற்காக இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுகிறார்கள். முறையில்லாமல், இண்டு இடுக்குகளில்கூட நுழைந்து விடுகிறார்கள். அதனாலேயே இங்கு தினமும் வாகன நெரிச்சல் ஏற்பட்டுவிடுகிறது.   
ஒவ்வொரு வாகனமும் மற்ற வாகனத்தை முந்திக்கொண்டு முதலில் செல்லவேண்டும் என்ற எண்ணத்துடனேயே செல்கின்றனவே தவிர, எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும் என்ற எண்ணம் எதற்கும் இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். பள்ளி காவலாளி சொல்லச் சொல்ல கேட்காமல், பள்ளியின் கேட்டுக்கு அருகிலேயே கார்களை நிறுத்திவிட்டு போகின்றவர்களும் இருக்கிறார்கள். பள்ளி நிர்வாகம் எதற்கு வாயிலில் காவலாளிகளை ஒன்றுக்கு இரண்டாக நியமித்து அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கிறது? நம் குழந்தைகளை பாதுகாக்கத்தானே? அதற்கு நாமே ஒத்துழைக்க மறுத்தால் எப்படி?  கார்களை இப்படி வாசலை அடைத்தபடி நிறுத்திவிட்டுப் போகிறவர்கள் இதை யோசித்துப் பார்க்கவேண்டும். 
இது மட்டுமல்ல. தண்ணீர் கேன் கொண்டு செல்லும் வாகனங்கள் காலை நேரத்தில்தான் தண்ணீர் கேன்களை எடுத்துச்செல்லவும்,  காலியான தண்ணீர் கேன்களை இறக்கி வைக்கவும் வந்து நிற்கும். அவர்களிடம் ‘ஏம்பா, ஸ்கூல் நேரத்துல இப்படி வந்து நிக்கிறீங்களே?’ என்று யாராவது கேட்க முடியுமா? கேட்டால், வேன் ஒட்டுபவர் பதில் எதுவும் சொல்ல மாட்டார். அந்தக் கேள்வி கேட்பவரை முறைத்துப் பார்ப்பார். கேள்வி கேட்டவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல், வாய்மூடி  புலம்பிக் கொண்டே போக வேண்டியதுதான். 
பள்ளிக்குச் செல்லும் சாலைகளில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள் ஆட்டோக்கள் விரையும்போது நெரிசல் வரத்தான் செய்யும். சில சமயங்களில் நெரிசல் ஏற்படும்போது, ஆட்டோ ஒட்டும் நண்பர்களும் சில பொது மக்களும் அதனை சீர்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். இந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். 
இந்த நெரிசல் பிரச்னையை எப்படித் தீர்ப்பது. நாளுக்கு நாள் வாகங்னகளீன் எண்ணிக்கை அதிகமாகிவரும் இன்றையச் சூழலில் நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், நெரிசலைக் குறைக்க நம்மால் முடிந்ததைச் செய்யலாம். எப்படி? 
அதற்கு வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் முறையாக சாலைவிதிகளைக் கடைபிடிக்கவேண்டும். முடிந்தவரை குழந்தைகளை பள்ளிகளுக்கு சீக்கிரமே அழைத்துச் செல்லவேண்டும். பள்ளியில் குழநதைகளை விட்டுவிட்டு வரும்போது, பள்ளிக்குச் செல்லும் மற்ற வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிடவேண்டும். சாலைகளில் முறைத்துக்கொண்டு நிற்காமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும். இவற்றை நாம் கடைபிடித்தாலே காலைப்பொழுது நன்றாக இருக்கும். கூடுமானவரைக்கும் நெரிசலில் இருந்து தப்பிக்க வழியும் பிறக்கும்.  எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைகளை சுமந்து செல்கிறோம் என்கிற எண்ணம் ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் அழுத்தமாக மனத்தில் பதிய வேண்டும். 

(18.12.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)