வியாழன், பிப்ரவரி 26, 2009

திமுக Vs 356

ஆட்சிக் கலைப்புக்கும் கழக ஆட்சிக்கும் ஏதோ ஜென்மத் தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட கட்சிகளிலேயே ஆட்சியில் இருக்கும்போதே இரண்டுமுறை கலைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தடவையும் கலைஞர் தலைமையிலான திமுக தான் ஆட்சியில் இருந்தது.

1967ல் முதல் திமுக ஆட்சி வந்தது. 1969ல் பேரறிஞர் அண்ணா மறைந்தபின், முதல்வரான கலைஞர் திடீரென ஆட்சியைக் கலைத்துவிட்டார்.

1975ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தபோது கலைஞர் தலைமையிலான திமுக அரசை 356ஐ பயன்படுத்திக் கலைக்கப்பட்டதுதான் முதல் தடவை.

1991ல் அதிமுக வற்புறுத்தியதால் பிரதமராக இருந்த சந்திரசேகர் 356ஐ பயன்படுத்தி கலைஞர் தலைமையிலான திமுக அரசு இரண்டாவது தடவையாகக் கலைத்தார்.

1997ல் ஐக்கிய முன்னணியில் திமுகவும் ஓர் அங்கம் வகித்து வந்தது. அப்போது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவு வழங்கியதாக கூறப்பட்டிருந்ததால், திமுக ஆட்சியைக் கலைக்குமாறும், திமுகவின் மத்திய அமைச்சர்களை நீக்குமாறும் கோரிக்கை வைத்தது, குஜ்ரால் அரசுக்கு ஆதரவளித்து வந்த காங்கிரஸ். காங்கிரஸ் தொடுத்த நெருக்கடியை ஏற்க மறுத்ததால் குஜ்ரால் பதவி விலகினார். அதன்பின்னர் வந்த பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த அதிமுக, திமுக ஆட்சியைக் கலைக்கச் சொல்ல, வாஜ்பாய் அரசு மறுத்தது, விளைவு மீண்டும் ஒரு நடாளுமன்றத் தேர்தல்.

2006ம் ஆண்டு ஐந்தாம் முறையாக கலைஞர் முதல்வராக பதவியேற்று தற்போது மூன்று வருடங்கள் ஆக போகின்றது. இன்னும் என்னடா திமுக ஆட்சியைக் கலைக்கச் சொல்லி யாரும் கேட்கவில்லையே? என எண்ணிக் கொண்டிருக்கையில்...

இதோ மீண்டும் 356ஐ கேட்டுவிட்டது அதிமுக.

உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கலைக்க உத்தரவிடவேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கிறார் முன்னாள் சட்ட அமைச்சர் ஜெயக்குமார்.

என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

3 times man.. the other one was during ADMK's rule under MGR.. during Indra Gandhi's PMship