ஞாயிறு, ஜூன் 24, 2012

0 கருத்துகள்
தந்தையர் தினத்தன்று (17,06.2012) தினகரன் வசந்தம் இதழில் அழுகை என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை வெளிவந்தது.



ஞாயிறு, ஜூன் 17, 2012

தந்தையர் தினம்

0 கருத்துகள்
தந்தையர் தினத்தையொட்டி நான் எழுதிய கவிதைகள் சில...


பிரச்னைகளிலிருந்து
என்னைக் காக்கும்
பிதாமகன்

*

நான் தேடிய அனைத்தையும்
எனக்களித்து உயிர்கொடுத்த
கூகுள்

*

புரியாமலிருந்த அனைத்தையும்
புரிய வைத்த என்
ஏழாம் அறிவு

*

சோகங்களில் சோர்வடையாமல்
சந்தோசங்கள் தலைக்கேறாமல் - உன்
அனுபவங்களை எனக்கு பாடமாக்கிய
அறிவுத்தந்தை


*
எதைப் பார்ப்பது?
எதைப் படிப்பது?
எதை எடுப்பது?
எதை விடுவது?
எதை பிடிப்பது?
என்று எதுவும் தெரியாமலிருந்தவனுக்கு
அனைத்தையும் விளங்க வைத்த
என் ஞானக்கண்

ஞாயிறு, ஜனவரி 01, 2012

ஒற்றுமையே பிரச்னையில்லாதது

0 கருத்துகள்
இந்த ஆண்டு இனிய ஆண்டாக தொடங்கட்டும்.

சென்ற ஆண்டும் இனிய ஆண்டாகத்தான் தொடங்கியது. இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு நிறைய பிரச்னைகள் வந்துகொண்டே இருந்தது. இன்னும் இருந்துகொண்டே இருக்கின்றன.

கூடங்குளம் அனல்மின் நிலையம், முல்லைப் பெரியாறு அணை, ஆட்சி மாற்றம், பேருந்து பயணச் சீட்டுக் கட்டணம் ஏற்றம், ஆவின் பால் விலை உயர்வு என பல பிரச்னைகள்.

பெட்ரோல் விலை உயர்வு, சமையல் கேஸ் விலை உயர்வு என மத்திய அரசும் விலை உயர்த்தியது.

தீபாவளி தீபாவளியாக பலர் கொண்டாடவில்லை காரணம் விலையேற்றம்.

கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸாக கொண்டாட முடியவில்லை காரணம் விலையேற்றம்.

இப்படி விலையேற்றத்தில் பெரியவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால்,குழந்தைகளும் பிரச்னையில் சிக்கிக்கொண்டதுதான் வேடிக்கை. பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் என்ன கல்வி படிப்பது? சமச்சீர் கல்வியா? இல்லையா என்று கிட்டதட்ட மூன்று மாதங்கள் பாடப் புத்தகங்கள் இல்லாமல் சென்று வந்தது. பிரச்னைகளின் உச்சம்.

இறுதியில் குழந்தைகள் சமச்சீர் கல்வி பயில வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறினாலும், இன்னும் பல பள்ளிகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் இன்றும் இரட்டைப் பாடங்கள் படிப்பது வேதனையான விஷயமாகவே தொடருகிறது. அதென்ன இரட்டைப் பாடங்கள். அதொன்றுமில்லை சமச்சீர் கல்வியை இரண்டாம் தரப் பாடமாக வைத்துக்கொண்டு, முதல் தர பாடமாக மெட்ரிக்குலேஷன் பள்ளி ஏற்கனவே சொல்லித் தந்தப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு இந்த வருடத்தில் ஒரு முடிவு வர நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம்.

அது ஒன்றுதான் பிரச்னையில்லாதது.

வெள்ளி, மே 06, 2011

ரஜினியின் தமிழ் - தெலுங்கு

0 கருத்துகள்

ரஜினி என்றாலே அனைவருக்கும் ஈர்ப்பு வந்துவிடுகிறது.

அவரைப் பற்றி எது எழுதினாலும் அது சூப்பர் ஹிட்டாகி விடுகிறது.

‘சிவாஜி’ படத்தில் முதலிரவு காட்சியில் சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல் மாதிரியெல்லாம் ஆடியிருப்பார்.


அதே காட்சி தெலுங்கில் வரும்போது யார் மாதிரியெல்லாம் ஆடியிருக்கார் தெரியுமா? இதோ...



எப்படி ச்சும்மா கலக்குகிறார்ல்ல. தமிழ்ல சிவாஜி, எம்ஜிஆர் மாதிரி பண்ணும்போத ரஜினி ஸ்டைல் அங்கங்கே தெரியும்.

தெலுங்கில் அப்படி தெரியவில்லை. நாகேஸ்வரராவ், என்டிஆர், சீரஞ்சிவி மாதிரியே ஆடியிருப்பார் ரஜினி.

ரஜினி ரஜினிதான்.

வெள்ளி, ஏப்ரல் 29, 2011

பாலபாரதியை வாழ்த்துவோம்...

0 கருத்துகள்

‘நாங்க’

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘நாங்க’ படத்தின் பாடல்களை இணைய தளத்தில் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது.

இசையமைப்பாளர் யார்? தல அஜீத் முதல் படத்துக்கு இசையமைத்த பாலபாரதிதான்.

தலைவாசல், அமராவதி போன்ற சில படங்களுக்கு இசையமைத்து காணாமல் போனவர். இப்போது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இசையமைக்க வந்திருக்கிறார். வாய்ப்பு தந்தவர் இயக்குநர் செல்வா. காரணம் 80களில் நடைபெற்ற சம்பவங்களைக் கொண்ட படமாம்.

அப்போது இசைஞானி இளையராஜா பீக்கில் இருந்தார். அதனால்தான் அவரால் பாராட்டப்பட்ட பாலபாரதி இசையமைக்க அழைத்திருக்கிறார் போலும். (நீலா மாலா தொலைக்காட்சி தொடரின் பின்னணி இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டாராம் இளையராஜா).

படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இதில் 6 பாடல் மெலடியானவை. 2 பாடல்கள் ஜனரஞ்சகப் பாடல்கள்.

முதல் பாடலும், இறுதிப் பாடலும் ஒரே மெட்டுதான். முதல் பாடலை ஆண் குரலில் கார்த்திக் பாடியுள்ள ‘தேவதையா... அவள் தேவதையா...’ பெண் குரலில் ஷைலஜா சுப்ரமண்யம் காதலனே... இவளின் காதலனே... என்றும் பாடியிருக்கிறார்கள். நன்றாகவே உள்ளது. கொஞ்சம் டிவி சீரியல் வாசனை.

ரவி, அனிதா சுரேஷ் பாடிய முத்தமிழே, முத்தமிழே... நீ வருவாயா சூப்பர். இளையராஜாவின் பனிவிழும் மலர் வனம் பாடலை நினைவுப்படுத்துகிறது.

கார்த்திக், சின்மயி பாடிய இதழில் கதை எழுத வேண்டும்... என்ற பாடலும்,

விஜய் பிரகாஷ, ஷைலஜா சுப்ரமண்யம் எங்கே எங்கே காதல் எங்கே என்ற பாடலும் அருமை.

இந்த நான்கு பாடல்களுமே திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.

ஹரிசரண், ஷைலஜா சுப்ரமண்யம் பாடிய எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ.... கொஞ்சம் பாஸ்ட் பாடல். சுமார் ரகம். பாடலின் இடையிடையில் பாபி இந்திப் பாடல்களின் பிட்ஸ் சேர்த்திருக்கிறார்கள்.

அடியே... வாடி பொட்டப்புள்ள.., ஜனரஞ்சகப் பாடல்.

ரொமான்ஸ் ரௌடிங்க நாங்க... இப்பாடலில் ஆங்காங்கே கவுண்டமணி டயலாக்கை சேர்த்திருக்கிறார்கள். இதுவும் ஜனரஞ்சகப் பாடல்தான். இப்பாடல் அனைவரையும் கவரும்.

இசையமைப்பாளர் பாலபாரதி அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார். நல்ல மெலடிகளை தரக்கூடியவர் வாழ்த்துவோம். வாங்க...

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

கவிதை கேளுங்கள்...

0 கருத்துகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி இரண்டாவதுஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்ற நாள். (30.03.2011)

அன்றுதான் நண்பர் பாலு சத்யா சாகித்ய அகாதெமி நடத்தும் கவியரங்கத்தில் கவிதை வாசித்தார். எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் கவியரங்கத்திற்கு நான் அங்கு சென்றபோது, நண்பர் பாலு சத்யா, கவிஞர் நா.வே. அருளிடம் பேசிக்கொண்டிருந்தார். உடன் உமா சம்பத்.

கவியரங்கம் ஆரம்பமானது. ஒவ்வொரு கவிஞராக மேடைக்குச் சென்றனர். ஒவ்வொரு கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்டார்கள். பாலு சத்யாவையும் அறிமுகப்படுத்தினார்கள்.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். நான்கு சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டவர். தினமணி சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றவர். ஆனந்த விகடன், குங்குமம், கல்கி, அம்ருதா, பெண்ணே நீ போன்ற பல இதழ்களில் எழுதிக் கொண்டிருப்பவர். கிழக்குப் பதிப்பகத்தில் துணை ஆசிரியர்கள் குழுவில் இருப்பவர். பல வரலாற்று நூல்களை எழுதியிருப்பவர்.


பாலு சத்யா கவிதை வாசிக்க வந்தார். அவர் கவிதைகளில் தெருக்களில் விளையாடும் சிறுவர்களின் அவலம் குறித்து இறுதி ஆட்டம் என்ற தலைப்பிலும், ரயிலில் பயணிக்கும் பயணியின் நிலை குறித்து இரயில் சிநேகம் என்ற தலைப்பிலும், பிராமணப் பெண் ஒருத்தி, தன் வீட்டில் நடக்கும் விசேஷத்தில் அவள் படும் கஷ்டத்தினை உணர்த்தும் வகையில் கண்ணாடி இலை என்ற தலைப்பிலும், ஒண்டுக் குடித்தனத்தில் வசிக்கும் இளம் பெண் வீட்டிலும் அலுவலகத்திலும் படும் அவஸ்தைகளின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அவள் என்ற தலைப்பிலும் கவிதைகளை வாசித்தார். கவிதைகளையும் கவியரங்கத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் ரசித்து, கைத்தட்டி பாராட்டினார்கள்.

நடுவராய் வந்திருந்தவர் ஆர். நடராசன், பாலு சத்யாவைப் பாராட்டும்போது, குறிப்பாக அவள் என்ற கவிதையைப் பாராட்டி, இப்படி ஒரு கவிதையினை ஒரு பெண்ணால்கூட படைத்திருக்க முடியாது என்று பாலுசத்யாவின் கவிதை ஆழத்தைப் புரிந்து பாராட்டினார்.

அவர் வாசித்த கவிதைகளிலிருந்து இரண்டு கவிதைகள்...

கண்ணாடி இலை

மூன்று மணிக்கு எழுந்து
மடி ஆசாரத்துக்கு மாசில்லாமல்
மாமனார் திவசத்துக்காக
உயிர் கரைய வேலை.

என்ன கோபமோ
மாமனார் காகமாக
வந்து பிண்டத்தைக்
கொத்தித் தின்ன
அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.

‘சமையல் பிரமாதம்!’
சம்பாவணை வாங்கிய பிராமணர்
வெற்றிலைச் சிவப்புத் தெறிக்க
வாய்நிறையச் சொன்னார்.

பிராமணாளுக்குப் பிறகு
ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் போஜனம்.
பரிமாறும்போது இடுப்பில் பிடித்துக்கொள்ள
பல்லைக் கடித்து சமாளிப்பு.

சாப்பிட்ட இடத்தை
நீர் தெளித்து மெழுகி
மதியம் மூன்றரை மணிக்கு
கடைசியாகச் சாப்பிட அமர்ந்தால்
உணவைப் பார்த்தாலே உமட்டல்.

காலையிலிருந்து காபிகூட
பல்லில் படாதது நினைவுக்கு வர
கொஞ்சமாக உணவு கொறிப்பு.

சாப்பிட்ட இலைகளை
கூடையில் போட்டு
அடுத்த தெரு
பசுமாட்டுக்குக் கொடுக்கும்போது
மாமி கேட்டாள்:
‘கோமதி! யாருக்கு திவசம்?’

‘எனக்குத்தான்.’


அவள்

கிளிகளைக் கூட்டமாய்ப் பார்த்து
வெகு நாளாகிறது.

அவை கதறியபடி
சீட்டுகளைப் பொறுக்கமட்டும்
வெளியே வருகின்றன.

கிளிகளுக்கு ஒரு கூண்டு
அவளுக்கு இரண்டு.

வீடு - அலுவலகம்.

வீடு பரவாயில்லை.

தெருவில் இறங்கினால்
மார்பகங்களை வெறிக்கும்
ஆண்களின் பார்வை -

பேருந்துப் பயணத்தில்
வியர்வைக் கசகசப்போடு
அசிங்கமான உரசல்-

இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசும்
வயதான சூப்பர்வைசரின் நாக்கு -

முகத்தைப் பார்க்காமல்
எங்கெங்கோ அலைபாயும்
மேலாளரின் கண்கள் -

இப்படி...
அவளைக் காமப்பண்டமாய்
உணரவைத்துக் குறுக வைக்கும்
அசிங்கத் தொந்தரவுகள்
அதிகம் இல்லை வீட்டில்.

எட்டுவீடுகள் கொண்ட
தொகுப்புக் குடியிருப்பில்
பொதுக் கழிவறையும்
பொதுக் குளியலறையும்
பெருந்தொல்லை அவளுக்கு.

காக்காய் குளியலைக்கூட
நிறுத்தி நிதானமாகச்
செய்ய முடியாது.

அலுவலகம் செல்லும்
அவசரத்திலும்
குளியலறைக் கதவுக்கு வெளியே
காத்திருக்கும் ஆண்களின்
எக்ஸ்ரே பார்வை
அவளை தகித்தபடிதான் இருக்கிறது.

கழிவறைக்கு வெளியேயிருந்து
‘சுசீலா! இன்னுமா முடியலை?’
குரல் கேட்கும்போதெல்லாம்
புழுவாய் உணர்வாள்.

ஒவ்வொரு நாளும்
ஆடை மாற்றும் தருணங்களில்
ப்ளஸ்டூ படிக்கும் தம்பியையும்
ஆஸ்துமா வந்த அப்பாவையும்
வெளியே அனுப்பி
கதவைச் சாத்தவேண்டியிருக்கிறது.

ஒற்றை அறைதான்
அவளையும் சேர்த்து
நான்குபேருக்கான முழுவீடு.

இரவில் - அடுத்த வீட்டுத்
தொலைக்காட்சிப் பெட்டியின்
இரைச்சலைத் தாங்கியபடி
சுவரோடு ஒட்டிக்கொண்டு
அவள் உறங்கும்போது
கனவில் வருபவர்கள்
ராஜகுமாரர்கள் அல்ல.

சுகமான ஆற்றுநீர்க்
குளியல் -
வேப்பம் பூக்கள்
உதிர்ந்து கிடக்க
சுற்றிலும் மரங்கள் படர்ந்த வீடு -
சுதந்தரமாய் சுற்றிவர
சின்னதாய் ஒரு
மாந்தோப்பு -
இனிய தோழிகள் -
கண்களை மட்டும்
நேருக்கு நேராய்ப்
பார்த்துப் பேசும்
கண்ணியமான ஆண்மக்கள் -
இவைதான் நித்திய கனவு
எப்போதும்.

அவள் ஒருத்தியில்லை
ஆயிரம் லட்சம் கோடியாய்
வசிக்கிறாள்
இந்திய நகரங்களில்.



ஐந்து கவிதைகளையும் அழகிய உச்சரிப்புடன், வார்த்தைகளுக்கேற்ப குரலை மாற்றி, உணர்ச்சிகரமாகவும் உணர்வுபூர்வமாகவும் கவிதைகளை வழங்கியதில், பாலுமகேந்திராவின் மாணவன் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டினார் என்பது உண்மை.

சனி, ஜனவரி 01, 2011

2011 புத்தாண்டு வாழ்த்துக்கள்

0 கருத்துகள்
பதிவர்கள் அனைவருக்கும், பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும்

என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்