Sunday, January 01, 2012

ஒற்றுமையே பிரச்னையில்லாதது

0 கருத்துரைகள்
இந்த ஆண்டு இனிய ஆண்டாக தொடங்கட்டும்.

சென்ற ஆண்டும் இனிய ஆண்டாகத்தான் தொடங்கியது. இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு நிறைய பிரச்னைகள் வந்துகொண்டே இருந்தது. இன்னும் இருந்துகொண்டே இருக்கின்றன.

கூடங்குளம் அனல்மின் நிலையம், முல்லைப் பெரியாறு அணை, ஆட்சி மாற்றம், பேருந்து பயணச் சீட்டுக் கட்டணம் ஏற்றம், ஆவின் பால் விலை உயர்வு என பல பிரச்னைகள்.

பெட்ரோல் விலை உயர்வு, சமையல் கேஸ் விலை உயர்வு என மத்திய அரசும் விலை உயர்த்தியது.

தீபாவளி தீபாவளியாக பலர் கொண்டாடவில்லை காரணம் விலையேற்றம்.

கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸாக கொண்டாட முடியவில்லை காரணம் விலையேற்றம்.

இப்படி விலையேற்றத்தில் பெரியவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால்,குழந்தைகளும் பிரச்னையில் சிக்கிக்கொண்டதுதான் வேடிக்கை. பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் என்ன கல்வி படிப்பது? சமச்சீர் கல்வியா? இல்லையா என்று கிட்டதட்ட மூன்று மாதங்கள் பாடப் புத்தகங்கள் இல்லாமல் சென்று வந்தது. பிரச்னைகளின் உச்சம்.

இறுதியில் குழந்தைகள் சமச்சீர் கல்வி பயில வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறினாலும், இன்னும் பல பள்ளிகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் இன்றும் இரட்டைப் பாடங்கள் படிப்பது வேதனையான விஷயமாகவே தொடருகிறது. அதென்ன இரட்டைப் பாடங்கள். அதொன்றுமில்லை சமச்சீர் கல்வியை இரண்டாம் தரப் பாடமாக வைத்துக்கொண்டு, முதல் தர பாடமாக மெட்ரிக்குலேஷன் பள்ளி ஏற்கனவே சொல்லித் தந்தப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு இந்த வருடத்தில் ஒரு முடிவு வர நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம்.

அது ஒன்றுதான் பிரச்னையில்லாதது.

Friday, May 06, 2011

ரஜினியின் தமிழ் - தெலுங்கு

0 கருத்துரைகள்

ரஜினி என்றாலே அனைவருக்கும் ஈர்ப்பு வந்துவிடுகிறது.

அவரைப் பற்றி எது எழுதினாலும் அது சூப்பர் ஹிட்டாகி விடுகிறது.

‘சிவாஜி’ படத்தில் முதலிரவு காட்சியில் சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல் மாதிரியெல்லாம் ஆடியிருப்பார்.

video

அதே காட்சி தெலுங்கில் வரும்போது யார் மாதிரியெல்லாம் ஆடியிருக்கார் தெரியுமா? இதோ...


video

எப்படி ச்சும்மா கலக்குகிறார்ல்ல. தமிழ்ல சிவாஜி, எம்ஜிஆர் மாதிரி பண்ணும்போத ரஜினி ஸ்டைல் அங்கங்கே தெரியும்.

தெலுங்கில் அப்படி தெரியவில்லை. நாகேஸ்வரராவ், என்டிஆர், சீரஞ்சிவி மாதிரியே ஆடியிருப்பார் ரஜினி.

ரஜினி ரஜினிதான்.

Friday, April 29, 2011

பாலபாரதியை வாழ்த்துவோம்...

0 கருத்துரைகள்

‘நாங்க’

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘நாங்க’ படத்தின் பாடல்களை இணைய தளத்தில் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது.

இசையமைப்பாளர் யார்? தல அஜீத் முதல் படத்துக்கு இசையமைத்த பாலபாரதிதான்.

தலைவாசல், அமராவதி போன்ற சில படங்களுக்கு இசையமைத்து காணாமல் போனவர். இப்போது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இசையமைக்க வந்திருக்கிறார். வாய்ப்பு தந்தவர் இயக்குநர் செல்வா. காரணம் 80களில் நடைபெற்ற சம்பவங்களைக் கொண்ட படமாம்.

அப்போது இசைஞானி இளையராஜா பீக்கில் இருந்தார். அதனால்தான் அவரால் பாராட்டப்பட்ட பாலபாரதி இசையமைக்க அழைத்திருக்கிறார் போலும். (நீலா மாலா தொலைக்காட்சி தொடரின் பின்னணி இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டாராம் இளையராஜா).

படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இதில் 6 பாடல் மெலடியானவை. 2 பாடல்கள் ஜனரஞ்சகப் பாடல்கள்.

முதல் பாடலும், இறுதிப் பாடலும் ஒரே மெட்டுதான். முதல் பாடலை ஆண் குரலில் கார்த்திக் பாடியுள்ள ‘தேவதையா... அவள் தேவதையா...’ பெண் குரலில் ஷைலஜா சுப்ரமண்யம் காதலனே... இவளின் காதலனே... என்றும் பாடியிருக்கிறார்கள். நன்றாகவே உள்ளது. கொஞ்சம் டிவி சீரியல் வாசனை.

ரவி, அனிதா சுரேஷ் பாடிய முத்தமிழே, முத்தமிழே... நீ வருவாயா சூப்பர். இளையராஜாவின் பனிவிழும் மலர் வனம் பாடலை நினைவுப்படுத்துகிறது.

கார்த்திக், சின்மயி பாடிய இதழில் கதை எழுத வேண்டும்... என்ற பாடலும்,

விஜய் பிரகாஷ, ஷைலஜா சுப்ரமண்யம் எங்கே எங்கே காதல் எங்கே என்ற பாடலும் அருமை.

இந்த நான்கு பாடல்களுமே திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.

ஹரிசரண், ஷைலஜா சுப்ரமண்யம் பாடிய எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ.... கொஞ்சம் பாஸ்ட் பாடல். சுமார் ரகம். பாடலின் இடையிடையில் பாபி இந்திப் பாடல்களின் பிட்ஸ் சேர்த்திருக்கிறார்கள்.

அடியே... வாடி பொட்டப்புள்ள.., ஜனரஞ்சகப் பாடல்.

ரொமான்ஸ் ரௌடிங்க நாங்க... இப்பாடலில் ஆங்காங்கே கவுண்டமணி டயலாக்கை சேர்த்திருக்கிறார்கள். இதுவும் ஜனரஞ்சகப் பாடல்தான். இப்பாடல் அனைவரையும் கவரும்.

இசையமைப்பாளர் பாலபாரதி அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார். நல்ல மெலடிகளை தரக்கூடியவர் வாழ்த்துவோம். வாங்க...

Tuesday, April 05, 2011

கவிதை கேளுங்கள்...

0 கருத்துரைகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி இரண்டாவதுஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்ற நாள். (30.03.2011)

அன்றுதான் நண்பர் பாலு சத்யா சாகித்ய அகாதெமி நடத்தும் கவியரங்கத்தில் கவிதை வாசித்தார். எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் கவியரங்கத்திற்கு நான் அங்கு சென்றபோது, நண்பர் பாலு சத்யா, கவிஞர் நா.வே. அருளிடம் பேசிக்கொண்டிருந்தார். உடன் உமா சம்பத்.

கவியரங்கம் ஆரம்பமானது. ஒவ்வொரு கவிஞராக மேடைக்குச் சென்றனர். ஒவ்வொரு கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்டார்கள். பாலு சத்யாவையும் அறிமுகப்படுத்தினார்கள்.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். நான்கு சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டவர். தினமணி சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றவர். ஆனந்த விகடன், குங்குமம், கல்கி, அம்ருதா, பெண்ணே நீ போன்ற பல இதழ்களில் எழுதிக் கொண்டிருப்பவர். கிழக்குப் பதிப்பகத்தில் துணை ஆசிரியர்கள் குழுவில் இருப்பவர். பல வரலாற்று நூல்களை எழுதியிருப்பவர்.


பாலு சத்யா கவிதை வாசிக்க வந்தார். அவர் கவிதைகளில் தெருக்களில் விளையாடும் சிறுவர்களின் அவலம் குறித்து இறுதி ஆட்டம் என்ற தலைப்பிலும், ரயிலில் பயணிக்கும் பயணியின் நிலை குறித்து இரயில் சிநேகம் என்ற தலைப்பிலும், பிராமணப் பெண் ஒருத்தி, தன் வீட்டில் நடக்கும் விசேஷத்தில் அவள் படும் கஷ்டத்தினை உணர்த்தும் வகையில் கண்ணாடி இலை என்ற தலைப்பிலும், ஒண்டுக் குடித்தனத்தில் வசிக்கும் இளம் பெண் வீட்டிலும் அலுவலகத்திலும் படும் அவஸ்தைகளின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அவள் என்ற தலைப்பிலும் கவிதைகளை வாசித்தார். கவிதைகளையும் கவியரங்கத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் ரசித்து, கைத்தட்டி பாராட்டினார்கள்.

நடுவராய் வந்திருந்தவர் ஆர். நடராசன், பாலு சத்யாவைப் பாராட்டும்போது, குறிப்பாக அவள் என்ற கவிதையைப் பாராட்டி, இப்படி ஒரு கவிதையினை ஒரு பெண்ணால்கூட படைத்திருக்க முடியாது என்று பாலுசத்யாவின் கவிதை ஆழத்தைப் புரிந்து பாராட்டினார்.

அவர் வாசித்த கவிதைகளிலிருந்து இரண்டு கவிதைகள்...

கண்ணாடி இலை

மூன்று மணிக்கு எழுந்து
மடி ஆசாரத்துக்கு மாசில்லாமல்
மாமனார் திவசத்துக்காக
உயிர் கரைய வேலை.

என்ன கோபமோ
மாமனார் காகமாக
வந்து பிண்டத்தைக்
கொத்தித் தின்ன
அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.

‘சமையல் பிரமாதம்!’
சம்பாவணை வாங்கிய பிராமணர்
வெற்றிலைச் சிவப்புத் தெறிக்க
வாய்நிறையச் சொன்னார்.

பிராமணாளுக்குப் பிறகு
ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் போஜனம்.
பரிமாறும்போது இடுப்பில் பிடித்துக்கொள்ள
பல்லைக் கடித்து சமாளிப்பு.

சாப்பிட்ட இடத்தை
நீர் தெளித்து மெழுகி
மதியம் மூன்றரை மணிக்கு
கடைசியாகச் சாப்பிட அமர்ந்தால்
உணவைப் பார்த்தாலே உமட்டல்.

காலையிலிருந்து காபிகூட
பல்லில் படாதது நினைவுக்கு வர
கொஞ்சமாக உணவு கொறிப்பு.

சாப்பிட்ட இலைகளை
கூடையில் போட்டு
அடுத்த தெரு
பசுமாட்டுக்குக் கொடுக்கும்போது
மாமி கேட்டாள்:
‘கோமதி! யாருக்கு திவசம்?’

‘எனக்குத்தான்.’


அவள்

கிளிகளைக் கூட்டமாய்ப் பார்த்து
வெகு நாளாகிறது.

அவை கதறியபடி
சீட்டுகளைப் பொறுக்கமட்டும்
வெளியே வருகின்றன.

கிளிகளுக்கு ஒரு கூண்டு
அவளுக்கு இரண்டு.

வீடு - அலுவலகம்.

வீடு பரவாயில்லை.

தெருவில் இறங்கினால்
மார்பகங்களை வெறிக்கும்
ஆண்களின் பார்வை -

பேருந்துப் பயணத்தில்
வியர்வைக் கசகசப்போடு
அசிங்கமான உரசல்-

இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசும்
வயதான சூப்பர்வைசரின் நாக்கு -

முகத்தைப் பார்க்காமல்
எங்கெங்கோ அலைபாயும்
மேலாளரின் கண்கள் -

இப்படி...
அவளைக் காமப்பண்டமாய்
உணரவைத்துக் குறுக வைக்கும்
அசிங்கத் தொந்தரவுகள்
அதிகம் இல்லை வீட்டில்.

எட்டுவீடுகள் கொண்ட
தொகுப்புக் குடியிருப்பில்
பொதுக் கழிவறையும்
பொதுக் குளியலறையும்
பெருந்தொல்லை அவளுக்கு.

காக்காய் குளியலைக்கூட
நிறுத்தி நிதானமாகச்
செய்ய முடியாது.

அலுவலகம் செல்லும்
அவசரத்திலும்
குளியலறைக் கதவுக்கு வெளியே
காத்திருக்கும் ஆண்களின்
எக்ஸ்ரே பார்வை
அவளை தகித்தபடிதான் இருக்கிறது.

கழிவறைக்கு வெளியேயிருந்து
‘சுசீலா! இன்னுமா முடியலை?’
குரல் கேட்கும்போதெல்லாம்
புழுவாய் உணர்வாள்.

ஒவ்வொரு நாளும்
ஆடை மாற்றும் தருணங்களில்
ப்ளஸ்டூ படிக்கும் தம்பியையும்
ஆஸ்துமா வந்த அப்பாவையும்
வெளியே அனுப்பி
கதவைச் சாத்தவேண்டியிருக்கிறது.

ஒற்றை அறைதான்
அவளையும் சேர்த்து
நான்குபேருக்கான முழுவீடு.

இரவில் - அடுத்த வீட்டுத்
தொலைக்காட்சிப் பெட்டியின்
இரைச்சலைத் தாங்கியபடி
சுவரோடு ஒட்டிக்கொண்டு
அவள் உறங்கும்போது
கனவில் வருபவர்கள்
ராஜகுமாரர்கள் அல்ல.

சுகமான ஆற்றுநீர்க்
குளியல் -
வேப்பம் பூக்கள்
உதிர்ந்து கிடக்க
சுற்றிலும் மரங்கள் படர்ந்த வீடு -
சுதந்தரமாய் சுற்றிவர
சின்னதாய் ஒரு
மாந்தோப்பு -
இனிய தோழிகள் -
கண்களை மட்டும்
நேருக்கு நேராய்ப்
பார்த்துப் பேசும்
கண்ணியமான ஆண்மக்கள் -
இவைதான் நித்திய கனவு
எப்போதும்.

அவள் ஒருத்தியில்லை
ஆயிரம் லட்சம் கோடியாய்
வசிக்கிறாள்
இந்திய நகரங்களில்.



ஐந்து கவிதைகளையும் அழகிய உச்சரிப்புடன், வார்த்தைகளுக்கேற்ப குரலை மாற்றி, உணர்ச்சிகரமாகவும் உணர்வுபூர்வமாகவும் கவிதைகளை வழங்கியதில், பாலுமகேந்திராவின் மாணவன் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டினார் என்பது உண்மை.

Saturday, January 01, 2011

2011 புத்தாண்டு வாழ்த்துக்கள்

0 கருத்துரைகள்
பதிவர்கள் அனைவருக்கும், பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும்

என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Friday, December 31, 2010

எந்தக் கவிப் பாடினாலும்

1 கருத்துரைகள்
நீண்ட நாள் ஆகிவிட்டது பிளாக் எழுதி. இந்த ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதிக்குள் எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

டிசம்பர் 31. மதியம் 3.00 மணிக்கு.

டிசம்பர் மாதம் வந்தாலே இசை விழாக்கள்தான். நினைவுக்கு அந்த இசையைப் பற்றி ஏதாவது எழுதிவிடலாமா? அதன் விளைவுதான் இப்பதிவு.
மதுரை என். சோமசுந்தரம் என்கிற சோமு என்று சொன்னால் இப்போது எத்தனைப் பேருக்குத் தெரியுமோ? தெரியவில்லை. ‘மருதமலை மாமணியே முருகைய்யா’ என்ற பாடலைச் சொல்லி அவர்தான் மதுரை சோமு என்று சொன்னால், ‘ஒ... ’ அவரா என்பார்கள். அந்தப் பாடலைக் கேட்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்பது என் எண்ணம்.

அவர் பாடிய மற்றொருப் பாடல்தான்‘எந்தக் கவிப் பாடினாலும்’. இந்தப் பாடலை தற்போது பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணாசாய்ராம் மட்டுமே இப்போது பாடுகிறார். ஆனாலும் மதுரை சோமு குரலில் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, அருணாசாய்ராம் குரலில் பாடலைக் கேட்கும்போது நிறைய வித்தியாசங்களை அறிந்தேன்.

மதுரை சோமு பாடியதைக் கேட்கும்போது மனதை ஏதோ நெருடுவதை உணந்தேன்.

அருணா சாய்ராம் பாடலிலும் மனம் உருகினாலும், அவர் வார்த்தைகளை உடைத்து உடைத்து பாடுவதால் கேட்பதற்கு கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது.

உதாரணமாக சோதனையோ என்ற வார்த்தையை, ஸோ..... தனை.....யா... என்றும்,

முருகா என்பதை முருகா... முருகா... என்றும்

அன்னையும் அறிய... வில்லை

இதுபோன்று சில வார்த்தைகளை உடைத்து உடைத்து பாடுகிறார் அருணா சாய்ராம். எனவே நெருடல் ஏற்படுகிறது என்று எண்ணுகிறேன்.
மதுரை சோமு பாடியதைக் கேட்கும்போது இதுபோன்ற எவ்விதத் தவறும் எனக்கு தெரியவில்லை.

இதோ உங்களுக்காக அவர்கள் பாடிய பாடல். கேளுங்கள்.

மதுரை என். சோமு
அருணா சாய்ராம்



இரண்டு பாட்டையும் கேளுங்கள். மகிழுங்கள்.

Wednesday, June 23, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - நேர்மையான தலையங்கம்

1 கருத்துரைகள்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி பலர் பலவிதமாய் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கையில் இன்றைய தினமணியில் (23.06.2010) தலையங்கத்தைப் படித்தேன். அருமையாக இருந்தது. அத்தலையங்கம் உங்களுக்காக.


தலையங்கம்: ஊர் கூடித் தமிழ்த் தேர்!

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கும் இருந்து தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி,​​ கோவையில் இன்று முதல் தமிழ்ச் செம்மொழி மாநாடு காண இருக்கிறோம்.

உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுகிறது என்கிற அறிவிப்பு வந்தவுடன் 'உலகளாவிய உவகை' என்று தலையங்கம் தீட்டி நமது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தோம்.​ அறிவிப்பே உலகளாவிய உவகையைத் தருமானால்,​​ மாநாடு எத்தகைய இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை விவரிக்க வேண்டுமா,​​ என்ன?

ஈழத் தமிழர் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு மாநாடு தேவைதானா என்றும்,​​ அரசியல் ரீதியாகத் தங்களை பலப்படுத்திக் கொள்ள ஆளும் கட்சியால் கூட்டப்படும் மாநாடுதானே இது என்றும் கேள்விகளை எழுப்பி எதிர்மறைச் சிந்தனைகள் உருவாக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.

வீட்டில் ஒரு திருஷ்டி விழுந்துவிட்டது என்பதற்காக,​​ குழந்தை பிறந்தால் பெயரிடாமலா இருந்து விடுகிறோம்?​ இப்படி ஒரு மாநாடு கூட்டித் தமிழர்கள் ஓரணியில் நிற்பதன் மூலம்தானே உலகுக்குத் தமிழர்தம் ஒற்றுமை உணர்வையும்,​​ பலத்தையும் எடுத்துரைக்க முடியும்!

கடந்த 20 ஆண்டுகளாக,​​ குறிப்பாக,​​ பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் போன்ற கொள்கைகள் முன்னுரிமை பெற்றது முதல்,​​ தமிழினுடைய முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.​ எல்லா தளங்களிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது,​​ இல்லையென்றால்,​​ பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

படித்தாலும், ​​ ஏன்,​​ பேசினாலும்கூட மரியாதை இல்லை என்கிற வசை தமிழுக்கு எய்திடலாமோ?​ நடைமுறையில் அதுதானே உண்மை நிலை.​ தமிழர்கள் ஒருவருக்கொருவர் தமிழில் அளவளாவுவதுகூட அரிதாகி வருகிறதே.​ வீடுகளில் பெற்றோர் தங்கள் செல்வங்கள் ஆங்கிலத்தில் மழலைமொழி பேசுவதைக் கேட்டு குதூகலிக்க விரும்புகிறார்களே தவிர அவர்களுக்கு ஆத்திசூடியும்,​​ கொன்றைவேந்தனும்,​​ திருக்குறளும்,​​ நாலடியாரும் சொல்லிக் கொடுத்து மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டதே...

தமிழனுக்கு அடிக்கடி தமிழின் பெருமையை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.​ அதுமட்டுமல்ல.​ பன்னாட்டு அறிஞர்கள் தங்களது ஆய்வுகளைப் பதிவு செய்யக் களம் ஒதுக்கித் தரவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.​ உலகளாவிய அளவில் இதுபோலத் தமிழ் மாநாடு கூட்டப்பட்டால்,​​ சாமானியனுக்குத் தமிழின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த மாதிரியும் இருக்கும்.​ தொடர்ந்து ஆய்வுகள் நடத்த வழிகோலுவதால்,​​ மொழியின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியதாகவும் இருக்கும்.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வேளையில்,​​ அங்கிங்கெனாதபடி எங்கும் தமிழ்ச் சிந்தனை மட்டுமே பரவிக் கிடக்கும் சூழலில்,​​ தமிழ்ச் சகோதரர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

நமக்குள்ளே,​​ உற்றார் உறவினரோடு,​​ நண்பர்களோடு பேசும்போது இயன்றவரை தமிழில் மட்டுமே பேசுவது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்களேன்.​ நம் வீடுகளில் குழந்தைகள் 'டாடி,​​ மம்மி' என்று பெற்றோரை அழைப்பதற்கு முற்றுப்புள்ளி வையுங்களேன்.

அரசியல் கலப்பு என்பது இன்றைய இந்தியச் சூழலில் தவிர்க்க முடியாதது.​ ஆனால்,​​ என்ன அதிசயம்?...​ செம்மொழி மாநாட்டுக்காக விழாக் கோலம் பூண்டிருக்கும் கோவை மாநகரில் பார்வைபடும் இடம் எல்லாம் பட்டொளி வீசிப் பறப்பது மாநாட்டின் இலச்சினை தாங்கிய வண்ணக் கொடிகளே தவிர,​​ பெயருக்குக் கூட ஒரு கட்சிக் கொடி கிடையாது.​ ​

குறைந்தபட்சம் எங்காவது முதல்வரின் படமோ,​​ துணை முதல்வரின் படமோ ​ காணப்படுகிறதா என்றால்,​​ ஊஹும்.​ ஆளும் கட்சித் தொண்டர்கள் கரை வேட்டியில் வந்து குவிந்துவிடுவர் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம்.

ஆய்வரங்க நிகழ்ச்சியில்,​​ அமைச்சர் பெருமக்களும்,​​ ஆளும் கட்சிப் பிரமுகர்களும் ​ முன்னுரிமை பெற்றிருப்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி.

எள்ளளவும் அரசியல் கலவாத,​​ தரத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகள் மட்டுமே இடம்பெறுகின்றன.​ சமயம் புறக்கணிக்கப்படும் என்று பயந்தவர்கள் இப்போது அரசியல் முற்றிலுமாக ஆய்வரங்கங்களில் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

நாங்கள் முறையாக அழைக்கப்படவில்லை என்று சிலருக்கு மனக்குமுறல்.​ எங்களுக்கு போதிய வசதி செய்யப்படவில்லை என்று இன்னும் சிலரின் முணுமுணுப்புகள்.​ எனக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை என்று மேலும் சிலருக்கு ஆதங்கம்.​ தமிழின் பெயரால் நடத்தப்படும் ஒரு கோலாகலத் திருவிழாவில் நமது பங்களிப்பு என்ன என்று யோசித்துச் செயல்பட வேண்டியவர்கள்,​​ மரியாதையை எதிர்பார்த்துக் காத்திருப்பது அவர்களது தமிழ்ப் பற்றை சந்தேகிக்க வைக்கிறது.

இத்தனை பண விரயத்தில் எதற்காக இப்படி ஒரு செம்மொழி மாநாடு என்று கேட்பவர்கள்,​​ தமிழகத்தின் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கிறதே அதற்காக எத்தனை கோடிகள் செலவானாலும்தான் என்ன என்று ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கூட்டப்படும் இந்த வேளையில்,​​ தமிழின் சிறப்பையும்,​​ தமிழர் தம் மேன்மையையும் நமக்கு நாமே மீண்டும் உயர்த்திக் கொள்ள நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.​ பட்டி தொட்டியெல்லாம்,​​ தமிழ்,​​ தமிழ் மாநாடு என்கிற முழக்கத்தால்,​​ உறங்கிக் கிடக்கும் தமிழ் உணர்வு தட்டி எழுப்பப்படும் என்று நம்பலாம்.

மனமாச்சரியங்களைக் களைந்து,​​ குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் தமிழ் உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடிக் குதூகலிக்க வேண்டிய வேளை இது.​ குறுகிய அரசியல் கண்ணோட்டத்தினால்,​​ தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் இந்த கோலாகல விழாவைப் புறக்கணிப்பதன் மூலம் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது,​​ சீப்பை ஒளித்து வைத்துத் திருமணத்தை நிறுத்தும் முயற்சியாகத்தான் முடியும்!

இதற்கு முன்னால் நடந்த மூன்று உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களின் மனசாட்சி சொல்லும் இதுபோல அரசியல் கலவாத மாநாடு நடந்ததில்லை என்று.​ அதைச் சாதித்துக் காட்டிய முதல்வரின் சாதனைக்குத் தலைவணங்குகிறோம்!

'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்றும்,​​ 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்றும் முழங்கிய மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் விதத்தில் கூட்டப்படும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்!

நன்றி - தினமணி