வியாழன், மார்ச் 05, 2009

திண்டுக்கல்லு... திண்டுக்கல்லு...

‘சார் இப்ப என்னசார் பண்ணுறது?’ - அலுவலகத்தில் தவறு செய்த ஒருவர் தன் முதலாளியிடம் கேட்டான்.

‘நேராக திண்டுக்கல்லுக்குப் போ. ஒரு பெரிய பூட்டா பார்த்து வாங்கிவிட்டு வா. ரெண்டு பேரும் சேர்ந்து பூட்டிட்டு போவோம்.’

இதுபோன்ற பேச்சுக்கள் கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் முதலாளி, தொழிலாளிக்கிடையில் சாதாரணமாக நடைபெறுகிற ஒன்றாகும்.

‘சரி, பூட்டு வாங்கிட்டு வா என்று சொன்னால் போதாதா? அதென்ன திண்டுக்கல் பூட்டு?’ இப்படி ஒரு கேள்வி உங்கள் மனத்தில் தோன்றுகிறதல்லவா? அதற்கு ஒரு காரணம் இருகிறது. விசேஷமும் முக்கியத்துவமும் இருக்கிறது.

பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு.

இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாள்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார். வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆள்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத்திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.

நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.

பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது.

இதனை ஒழுங்குபடுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.

ஓர் இரும்பு தகட்டின்மேல் ஒர் அடையாளம் செய்து முதலில் துளைசெய்கின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்கின்றனர். புது பூட்டு ரெடி. கையால் மட்டுமே செய்யப்படுகின்றன பூட்டுகள்.
டிலோ பூட்டு

திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவிதான். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் சிறந்த வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ள சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது.

பெல் லாக்

இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும்போதும், திறக்கும்போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.

லண்டன் லாக்

ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து வந்த பழுது பார்ப்பதற்கு வந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.

இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப்பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.

திண்டுக்கல்லில் மட்டுமல்லாது அதனையொட்டிய நாகல்நகர், நல்லாம்பட்டி, மேட்டுப்பட்டி, கம்மாளப்பட்டி, குடைபாறைபட்டி, பெருமாள்கோவில்பட்டி, வேப்பம்பட்டி போன்ற இடங்களிலும் திண்டுக்கல் பூட்டுகள் செய்யப்படுகின்றன.

பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை எவ்வளவு தெரியுமா?

22 கிலோ!

(ப்ராடிஜியின் ‘மேதை’ இதழில் வெளியானது.)

1 கருத்து:

butterfly Surya சொன்னது…

குழந்தைகளுக்கான தகவல்களா.? அருமையான தகவல்கள். நன்றி.

அது சரி.. பூட்டுக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்மந்தம் அண்ணாச்சி..??